காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பின் தற்கொலைப்படைத் தாக்குதலில் வீர மரணம் அடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாக இந்திய அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்பின் கொடூரத் தாக்குதல் செயலுக்கு நாடுமுழுவதும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கௌதம் கம்பிர், வீரேந்திர சேவாக், முகமது கைப், ஷிகர் தவண் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் வெறும் கண்டனத்துடன் மட்டும் நின்றுவிடாமல், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஒரு அறிவிப்பை தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டார். இந்தச் சம்பவத்தில் வீர மரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் தமது சேவாக் இண்டர்நேஷனல் ஸ்கூல் மூலம் ஏற்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். மேலும், வீர மரணம் அடைந்த வீரர்களின் புகைப்படங்கள், அவர்களின் பெயர் பட்டியல் இவற்றையும் தனது டிவிட்டர் பக்கத்தில் சேவாக் வெளியிட்டுள்ளார்.
அவர் தனது டிவிட்டர் பதிவில் “வீரமரணம் அடைந்த இந்த வீரர்களுக்கு எது செய்தாலும் அது போதுமானதாக இருக்காது. ஆனால், என்னால் முடிந்தவரை குறைந்தபட்சமாக வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் முழுமையான கல்விச் செலவு அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். எங்கள் சேவாக் இண்டர்நேஷ்னல் ஸ்கூலில் படிக்க வைக்கிறேன் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சேவாக்கின் இந்த அறிவிப்பை அவரின் ரசிகர்களும் டிவிட்டர்வாசிகளும் பாராட்டி வருகின்றனர்.
Nothing we can do will be enough, but the least I can do is offer to take complete care of the education of the children of our brave CRPF jawans martyred in #Pulwama in my Sehwag International School @SehwagSchool , Jhajjar. Saubhagya hoga ???? pic.twitter.com/lpRcJSmwUh
— Virender Sehwag (@virendersehwag) February 16, 2019