புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி-முதல்வர் நாராயணசாமி இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
முதல்வரை ஆளுநர் சந்திக்க ஒப்புக்கொண்ட நேரம் கடந்ததால் பேச்சுவார்த்தை நடைபெறுவதில் இழுபறி ஏற்பட்டது. மாலை 6 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு வர முதல்வர், அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் கிரண்பேடி.
ஆனால், திடீரென தலைமைச் செயலகத்தில்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; ஆளுநர் மாளிகையில் அல்ல என்ற ரீதியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி நிபந்தனை விதித்து கடிதம் எழுதினார். இதை அடுத்து பேச்சுவார்த்தைக்கான சிக்கல் நீடித்தது.
முன்னதாக, ஆளுநர் டிவிட்டரில் அழைப்பு விடுக்கிறார் என்றும், டிவிட்டரில் அழைப்பு விடுப்பது மரியாதையானதுதானா என்றும் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார் நாராயணசாமி. இதனிடையே, ஆளுநர் அனுப்பிய கடிதம் கிடைத்தது; மாலை 6 மணிக்கு அமைச்சர்களுடன் ஆளுநரை சந்திக்கிறேன் என்று ஆளுநர் மாளிகை எதிரே போராட்டம் நடத்தி வந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் மீண்டும் கூறினார்.
மாலை 6 மணிக்கு முதல்வர் நாராயண சாமி சகாக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்பிய நிலையில், அதற்கு முன்னதாக புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தலைமை செயலாளர் அஷ்வினி குமாருடன் கிரண்பேடி அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் பேச்சுவார்த்தை நடக்காததால், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், தலைமைசெயலகத்தில் வைத்து நடத்தலாம் என்பது போன்ற நிபந்தனைகளை விதிக்க வேண்டாம் என கடிதத்தில் தகவல் தெரிவித்துள்ள கிரண் பேடி, இன்று பேச்சுவார்த்தை கிடையாது எனவும் பொதுவெளியில் விவாதிக்கத் தயார் என்றும் கடிதத்தில் கூறியுள்ளார்.
முன்னதாக, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயண சாமி ஆகியோருக்கு இடையே பல்வேறு தகராறுகள் இருந்து வந்த போதும், கடந்த வாரம் கட்டாய ஹெல்மெட் விவகாரத்தில் கிரண் பேடி மேற்கொண்ட அதிரடிகள் முதல்வர் நாராயணசாமியை மேலும் உசுப்பி விட்டன.
கிரண் பேடி களத்தில் இறங்கி தன் பழைய பணியான போலீஸ் வேலையைச் செய்வதை இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது…