மக்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை ; தண்ணீர் பிரச்னையை தீர்ப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறி ஓர் அறிக்கை விட்டிருக்கிறார் நடிகர் ரஜினி காந்த்.
நடிகர் ரஜினி காந்த், கடந்த இரு வருடம் முன்னர், தாம் தீவிர அரசியலில் குதிக்கப் போவதாகவும், அதற்காக ரசிகர் மன்றங்களை அரசியல் அமைப்புடன் கூடிய மக்கள் மன்றங்களாக மாற்றப் போவதாகவும், ஒரு திரைக்கதையில் நடிப்பது போல் தன் வாழ்க்கை சினிமாவை மேடையில் நடித்துக் காட்டினார். அவருடைய பிரமாதமான நடிப்பில் அசந்து போன ரசிகர்கள், மண்டல வாரியாக ரஜினியை சந்தித்து கைகுலுக்கவும் போட்டோ எடுத்துக் கொள்ளவும் முண்டியடித்தனர்.
இதனால் சுறு சுறுப்பாக மாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்றத்தினரை சந்தித்து போட்டோ எடுத்து ஏதோ பேசினார். தேர்தல் வரும் பார்க்கலாம்! தேர்தல் வரும்போது நாம் யார் என்று காட்டுவோம். போர்க்களம் புகும் போது, நாம் போர் புரிவோம். அதுவரை அமைதியாக இருப்போம் என்றெல்லாம் தன் ரசிகர்களை அமைதிப் படுத்தினார்.
இப்போது போர்க்களம் வந்துவிட்டது. போரும் தொடங்கிவிட்டது. ஆனால், தாம் இப்போதும் ஒரு பார்வையாளராக இருந்து போரைப் பார்க்கப் போவதாக இன்று அறிக்கை வெளியிட்டுக்கிறார் நடிகரும், சூப்பர் ஸ்டாரும், தமிழகத்தைக் காக்க வந்த வெள்ளித்திரையின் விடிவெள்ளியுமான ரஜினி காந்த்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்த கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ பிரச்சாரம் செய்வதற்கோ யாரும் பயன்படுத்தக்கூடாது
தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான வலுவான ஆட்சி அமைத்து தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் வாழ்க தமிழ் மக்கள் வளர்க தமிழ் நாடு ஜெய்ஹிந்த் அன்புடன் ரஜினிகாந்த் – என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இன்னும் 4 படம் ஹீரோவா நடிக்க வேண்டியிருக்கு போலிருக்கு…அதுக்குள்ள
சட்ட மன்ற தேர்தல் வரும்போது… அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பாத்துக்கலாம்னு சொல்லிடுவாரு… அதுக்குள்ள ரோபோவா 3 படம்
நடிச்சிருவாரு என்று கமெண்ட் இடுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!
அரசியலை வைத்து வியாபாரம் ஆக்கிக் கொண்டு தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் அரசியல்வாதிகள் மத்தியில், அரசியலினால் தன் தொழில் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் ஒரு வியாபாரியின் புதிய பிஸினஸ் மாடல் இது என்கிறார்கள் ரஜினியின் இந்த அறிவிப்பைக் கேட்டவர்கள்.