காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கத்தின் தற்கொலைப் படை பயங்கரவாதத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதை அடுத்து நாடே பெரும் அதிர்ச்சியில் ஆழந்தது. பெரும்பாலான மக்கள் கொந்தளித்துப் போயினர்.
இந்தக் கொடூரச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்காமல், ராணுவத்தை கொச்சைப் படுத்துபவர்கள், அரசியல் ரீதியாக கேலி செய்பவர்கள், பயங்கரவாதச் செயலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இவர்கள் மீது மக்களின் கோபம் திரும்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் எதிர்மறைக் கருத்துகள் எழுதுபவர்களைக் கண்காணித்து, அவர்களின் அலுவலகங்களுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர் பலர். சிலர் அமைப்பு ரீதியாக, கட்சி ரீதியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டிவிட்டர் பக்கத்தில் பகிரங்கமாக ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்த காஷ்மீரி மாணவர் அலிகார் முஸ்லிம் பல்கலை.,யில் இருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டார். அவர் தாக்குதலுக்கு ஆளானதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இது போல் நாட்டின் வடமாநிலங்களில் வேறு பகுதிகளிலும் காஷ்மீரி மாணவர்கள், பொதுமக்கள் ஏதாவது பேசி, தாக்குதலுக்கு உள்ளானால் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டும் அவர்களுக்கு தகுந்த உதவிகள் வழங்கும் பொருட்டும் சிஆர்பிஎஃப் தனது டிவிட்டர் பக்கத்தில் சிறப்பு உதவி எண்களையும் அறிவித்தது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு காரணம், தாக்குதல் சம்பவம் புல்வாமா உள்ளூர் காஷ்மீரி முஸ்லிம்களின் துணையுடன் நடத்தப் பட்டது என்று வெளியான தகவலால்தான்!
கடந்த பிப்.11 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்புப் படை வீரர்களின் வாகனங்கள் மீது பொதுமக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். புல்வாமா மாவட்டம் ரட்னிபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்த பாதுகாப்புப் படை வீரர்கள், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி பொதுமக்கள் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர்.
அதேபோல் பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஏற்கெனவே உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்புபடை 12ஆம் தேதி பயங்கரவாதிகளைத் தேடி அதே பகுதியில் களம் இறங்கினர். ஆனால், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்புப்படை வீரர்களைக் கல்லால் அடித்து விரட்டினர். இதனால் பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினரிடம் இருந்து பாதுகாக்க கல்வீச்சு, எதிர்ப்பு என இறங்கியதாகவும், அதனாலேயே மிகவும் கோரமான ஒரு சம்பவம் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக பொதுமக்கள் மீதான தாக்குதல் நடவடிக்கை தீவிரமாகும் என வதந்திகள் பரவிய நிலையில், காஷ்மீர் முழுதும் பதற்றமான சூழல் எழுந்தது. மேலும், தில்லி, மும்பை, பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் காஷ்மீரைச் சேர்ந்த பணியாளர்கள், மாணவ மாணவிகள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற முன்னெச்சரிக்கையின் காரணமாக, அவர்களுக்கு பாதுகாப்பளிக்க ராணுவம் உதவி எண்களை அறிவித்தது.
இதனிடையே, டேராடூன் பகுதியில் ஒரு கல்லூரியில் மாணவிகள் தாங்கள் பஜ்ரங்க் தளத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப் பட்டதாகவும், எனவே அச்சத்தில் உள்ளேயே முடங்கிக் கிடப்பதாகவும் தங்களைக் காப்பாற்றுமாறும் டிவிட்டரில் தகவல் கொடுத்தனர். மேலும் இது போல், பலரும் தங்கள் டிவிட்டர் பதிவுகளில், தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அச்சத்தில் இருப்பதாகவும் டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதை அடுத்து, சிஆர்பிஎப் டிவிட்டர் பக்கம் செய்துள்ள டிவிட்டில் ”வெளிமாநிலங்களில் வசிக்கும் காஷ்மீர் மக்கள், மாணவர்கள் எங்களை எந்த நேரமும் 14411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், அல்லது 7082814411 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். நீங்கள் துன்புறுத்தப்பட்டாலோ, தாக்கப்பட்டாலோ எங்களுக்கு தகவல் அளியுங்கள், உதவுகிறோம்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
#Kashmiri students and general public, presently out of #kashmir can contact @CRPFmadadgaar on 24×7 toll free number 14411 or SMS us at 7082814411 for speedy assistance in case they face any difficulties/harrasment. @crpfindia @HMOIndia @JKZONECRPF @jammusector @crpf_srinagar pic.twitter.com/L2Snvk6uC4
— CRPF Madadgaar (@CRPFmadadgaar) February 16, 2019