ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் இறங்க தனது விவசாய நிலத்தில் தளம் அமைக்கப்பட்டதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குண்டூரின் கொண்டவீடு கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க முதல்வர்
சந்திரபாபு நாயுடு சென்றார். இதற்காக குண்டூரில் உள்ள கொண்டவீடு கிராமத்தில் கோட்டேஸ்வர ராவ் என்ற கோட்டய்யா விவசாயிக்கு சொந்தமான நிலத்தில், அவரது
அனுமதி இன்றி தற்காலிக இறங்குதளம் அமைக்கப்பட்டது.
ஆனால் தன் நிலத்தில் ஹெலிகாப்டர் இயங்கு தளம் அமைக்க அவர் எதிர்ப்பு
தெரிவித்த போதும் அதிகாரிகள் அவரை அடக்கி வைத்து, அங்கே இறங்குதளம் அமைத்தனர்.
இதனைக் கண்ட அவர், நெஞ்சடைத்து விக்கித்துப் போனார். மனம் நொந்த அவர், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த விவசாயி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம், ஆந்திர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.
விவசாயி தற்கொலைக்குக் காரணமான அதிகாரிகள், போலீசார் மீது நடவடிக்கை
எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே போல், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இந்த விவகாரத்தில் குரல் எழுப்பியுள்ளன. இதனால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.