ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் பிரதமர் மோடி ஆந்திராவுக்குள் நுழைய உரிமை இல்லை என்று மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளுடன் காணொளிக் காட்சி மூலம் உரையாடினார் சந்திரபாபு நாயுடு! அப்போது அவர்,
ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப் பட்ட போது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என (காங்கிரஸ் அரசு) வாக்குறுதி அளித்தது. இதனை மோடியும் நாடாளுமன்றத்தில் உறுதி செய்தார். ஆனால் அவர் எந்த நிதியும் வழங்கவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆந்திராவுக்குள் நுழைய அவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. நாடாளுமன்றத்தில் வாக்கு அளித்த பிரதமர் மோடி அதைச் செய்யாததற்கு குறுகிய அரசியல் நோக்கமே காரணம்.
ஆனால், திருப்பதி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார். ஆந்திராவுக்கு நல்லது செய்யும் கட்சிக்கே நாங்கள் வாக்களிப்போம். சந்திரசேகர் ராவை போலவே, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும், பிரதமர் மோடிக்கு தான் ஆதரவு அளிப்பார். ஆந்திராவை வளரவிடாமல் தடுப்பதே இருவரின் நோக்கம்… என்று பேசினார்.
ஆனால், ஆந்திரப் பிரிவினையை செயல்படுத்தியது காங்கிரஸ். முன்னேற்பாடுகள், திட்டமிடல்கள் எதுவும் இன்றி பிரிவினையை செய்ததும் காங்கிரஸ். தெலங்கானா ராஷ்டிரீய சமிதியுடனான கூட்டணிக்காகவும், ஓட்டுக்காகவும் காங்கிரஸ் அவசர கதியில் பிரித்தது. அப்போது, ஆந்திரத்தை சமாதானப் படுத்தவும், அடுத்த தேர்தலில் ஓட்டுகளைப் பெறவும், நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை எல்லாம் அள்ளி வீசியது. ஆனால், காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை.
பின்னர் வந்த மோடி தலைமையிலான பாஜக., அரசு ஆந்திராவுக்கு நிதி ஒதுக்கீடு அதிகம் அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால், தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும் என்று, தமிழக நலனை கருத்தில் கொண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடிதம் மேல் கடிதம் மோடிக்கு எழுதினார். ஜெயலலிதாவுக்கு மதிப்பளித்தும், நிலைமையை நன்கு கவனித்தும், தமிழகத்துக்கு தீங்கிழைத்துவிடக் கூடாதென்ற நோக்கில், ஆந்திரம் கேட்கும் சிறப்பு அந்தஸ்து என்பதை சற்று ஒத்திவைத்துவிட்டு, மோடி, நிதி ஒதுக்கீடு, திட்டங்கள் செயல்படுத்தப் படுதலில் மட்டும் கவனம் செலுத்தினார்.
இந்நிலையில், நாயுடுவின் கோரிக்கைக்கு காங்கிரஸ் செவிசாய்ப்பதும், நாயுடுவின் கையைப் பிடித்துக் கொண்டு திமுக., ஸ்டாலின் கொஞ்சுவதும், தமிழகத்துக்கு மிகப் பெரிய பாதகமாகவே அமையும்!