புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்திய நாராயணசாமியைத் தொடர்ந்து, தில்லிக்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டத்தை தொடங்கவுள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், அமைதியின்மையில் தவித்துவருகிறார்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர்! அண்மைக் காலமாக மம்தா பேனர்ஜியுடன் கூட்டங்களில் பங்கேற்று மோடிக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தற்போது, துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி மார்ச் 1 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குகிறார்.
இன்று தில்லி சட்டமன்றத்தில் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், தில்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 1ஆம் தேதியில் இருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், தங்களை ஆளும் அரசை தில்லிவாசிகள் வாக்களித்து தேர்வு செய்து அனுப்பி வைக்கின்றனர். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் இல்லை. நாடு முழுவதும் அமலில் இருக்கும் சுதந்திரம் தில்லிக்கு மட்டும் ஏன் இல்லை? எனவே மார்ச் 1 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.