ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் அரசமைப்புச் சட்ட 35 A பிரிவு நீக்கப்படுமா என்ற கேள்வி இப்போது அனைவர் மனத்திலும் எழுந்துள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 35 A பிரிவை நீக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை
உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில் 100 கம்பெனி பாதுகாப்புப் படையினர் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு
கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்!
மார்ச் மாதத்திற்கான உணவுப் பொருட்களை உடனடியாக விநியோகித்து முடிக்கும் படி
பொது விநியோகத் துறைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பதட்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால் இந்த முன்னேற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஆனால் மத்திய அரசோ மாநில அரசோ எந்தக் காரணத்தையும் இதுவரை வெளியிடவில்லை.
35 A பிரிவு என்ன சொல்கிறது?
ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டமன்றம் தன்னிச்சையாக சட்டங்களை இயற்றிக் கொள்ள அனுமதி அளிக்கிறது. அந்த சட்டங்கள் இந்தியாவின் மாநில மக்களை பாதிப்பதாக இருந்தாலும் அதை எதிர்த்து நீதிமன்றங்களுக்கு செல்ல முடியாது.
இந்த பிரிவின் கீழ் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு உதாரணம்..
ஜம்மு – காஷ்மீர் பிரஜைகள் மட்டுமே நிரந்தர குடிமக்கள். இந்தியாவின் மற்ற மாநில மக்கள் ஜம்மு காஷ்மீரில் நிரந்தரமாக குடியமர முடியாது.
இதன் விளைவு என்ன?
ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர் தமிழ் நாட்டில் கூட குடியேற முடியும். வாக்காளர் ஆகமுடியும். அரசின் நல திட்ட உதவிகளை பெற முடியும். சொத்து வாங்க முடியும். பள்ளி கல்லூரிகளில் குழந்தைகளை சேர்க்க முடியும். உதவித் தொகைகளை பெற முடியும். வேலையில் சேர முடியும். தேர்தலில் போட்டியிட முடியும். இதில் எதையுமே தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் மட்டும் அல்ல; மற்ற இந்திய குடிமக்கள் யாருமே ஜம்மு – காஷ்மீரில் செய்ய முடியாது.
ஒன்று சுற்றுலா பயணிகளாக சென்று வரலாம். அல்லது எந்த உரிமையும் இல்லாமல் அங்கு தங்கலாம்.
35 A ஏன் நீக்கப்பட வேண்டும்?
அரசமைப்புச் சட்டத்தின் எந்த ஒரு பிரிவையும் இயற்றவும் திருத்தவும் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு. 35A பிரிவை நாடாளுமன்றம் இயற்ற வில்லை! குடியரசுத் தலைவர் 1954 ஆம் ஆண்டு பிரகடனம் செய்து இருக்கிறார். அந்த பிரகடனம் அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பிரிவாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.
வேறு வகையில் சொல்வதென்றால் அரசமைப்புச் சட்டத்தில் சொருகப்பட்டு இருக்கிறது! அதனால் , செல்லத் தக்கது அல்ல!
உச்ச நீதிமன்றம் இந்தப் பிரிவை ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்?
குடியரசுத் தலைவரின் ஆணையால் உண்டாக்கப்பட்ட இந்தப் பிரிவை இப்போது குடியரசு தலைவர் ஆணை பிறப்பிக்க முடியும். அப்படி ஆணை பிறப்பித்தால்
35 A பிரிவு ரத்து ஆகிவிடும்!
அதனால் என்ன ஆகும்?
விரும்பினால் நீங்களே கூட காஷ்மீரில் ஒரு வீடு வாங்க முடியும். கோடை வாசஸ்தலமாக வைத்துக் கொள்ள முடியும்! மிகப் பெரிய மாற்றத்திற்கான சூழ்நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது!