திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மாநில நீர் மேலாண்மை 2018 திட்டத்திற்கான மத்திய அரசு விருதினை பெற்றுள்ளார்.
இந்தியாவில் நீர் ஆதார மேலாண்மையின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, மத்திய நீர் ஆதாரத்துறை அமைச்சகம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு ஆண்டு தோறும் ‘தேசிய தண்ணீர் விருதுகள்’ வழங்கி வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று தில்லியில் நடைபெற்றது.
விழாவில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
இதில், மராட்டிய மாநிலம் முதல் பரிசையும், குஜராத் 2-வது பரிசையும், ஆந்திரா 3-வது பரிசையும் பெற்றது.
மாவட்டங்கள் வரிசையில் நெல்லை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் பல்வேறு பிரிவுகளில் பரிசுகளை வென்றன. இதில் நீர் நிலைகள் புனரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்குதல் பிரிவில் மதுரை மாவட்டத்துக்கு முதல் பரிசும், சிவகங்கை மாவட்டத்துக்கு 3-வது பரிசும் கிடைத்தன.
நிலத்தடி நீர் செறிவூட்டல் பணிகளுக்காக மதுரை மாவட்டத்துக்கு 3வது பரிசு வழங்கப்பட்டது.
நதி மீட்டெடுத்தல் பணிக்காக நெல்லை மாவட்டம் 3ஆவது பரிசைப் பெற்றது.
இந்தப் பரிசுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜே.ஜெயகாந்தன், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், முன்னாள் ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை, ஆனால் நீர் மேலாண்மை போதுமானதாக இல்லை. தேசிய அளவிலான தண்ணீர் விருதுகளை வழங்கும் அமைப்பு நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வந்ததில், நீர் சேகரிப்பில் மக்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தும்படி ஊக்கப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து தெரிய வந்துள்ளது.
பிரதான் மந்திரி வேளாண் பாசன திட்டம் மூலம் பல திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன.
இப்போது தண்ணீரை சேமிப்பதற்காக பாசனத்துக்கு தண்ணீரை கால்வாய்கள் மூலம் அனுப்புவதற்கு பதிலாக குழாய்கள் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் வீணாவதைத் தடுக்க மற்ற கால்வாய்களும் குழாய்களாக மாற்றப்படும்.
கும்பமேளாவையொட்டி கங்கையில் நீர் தொடர்ச்சியாக தூய்மையானதாகக் கொண்டு செல்லப் பட்டது. கும்பமேளாவில் பங்கேற்ற மக்கள் நீர் மிகத் தூய்மையாக இருந்ததாக பாராட்டினர். கங்கையில் டால்பின்கள், ஆமைகள், நீர்ப் பறவைகள் காணப்படுவதால் கங்கை நதியின் தரம் உயர்ந்துள்ளது தெரிகிறது… என்றார்.