தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும், திமுக கூட்டணியில் விஜயகாந்த் இணைவார் என்றும் உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் உலாவருகின்றன.
அதே நேரம், திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது 99 சதவிகிதம் உறுதியாகி உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் எனவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றது!
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், பலம் வாய்ந்த கூட்டணியே தேவை என்று எல்லாக் கட்சிகளுமே முடிவு செய்துவிட்டன. கடந்த சில வருடங்களாக இரு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி சேராமல் தனித்து இருந்த பாமக.,வுக்கு சொல்லிக் கொள்ளும்படி வாக்குகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், திமுக.,வும் தனியாகப் போட்டியிட்டால் போணியாகாது என்று பலமாக நம்பி, பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்க களம் இறங்கியுள்ளது. எனவே, திமுக தலைமையில் சில கட்சிகள் இணைந்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்கி வருகின்றன. அதுபோல அதிமுக தலைமையில் பாஜக, பாமக இணைந்து மற்றொரு மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
இந்த இரு கட்சிகளும், விஜயகாந்தின் தேமுதிகவை இழுக்க முயற்சி எடுத்து வருகின்றன. தேமுதிகவை அதிமுக அணிக்கு இழுக்க பாஜக நேரடியாக முயற்சி மேற்கொண்டது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நேரடியாகவே சென்று விஜயகாந்த் மற்றும் பிரேமலதா, சுதீஷ் ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், தேமுதிகவின் நிபந்தனைகள் ஒத்துவராததால், பதில் சொல்ல முடியாமல் திருப்பினார். பின்னர் அதிமுக தலைமை பேசியதாக தகவல் வெளியானது.
தேமுதிகவுடன் கூட்டணி குறித்து தொடக்கத்தில் ஆர்வம் காட்டாத திமுக, கூட்டணியை பலப்படுத்த எண்ணி, தேமுதிகவை தொடர்பு கொள்ள முயற்சித்தது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று, விஜயகாந்தின் உடல் நிலை குறித்து விசாரித்தார். உடல் நலம் மட்டும் விசாரிக்காமல் அரசியல் குறித்தும் பேசப்பட்டதாக பிரேமலதா கூறினார். இதைத் தொடர்ந்து, திமுக தேமுதிக இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் திமுக, தேமுதிக இடையே கூட்டணி முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. தேமுதிக.,வுக்கு 5 தொகுதிகளை ஒதுக்க திமுக கூட்டணி முடிவு செய்திருப்பதாகவும், இதில் 3 தொகுதிகளை திமுகவும் 2 தொகுதிகளை காங்கிரசும் ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும், காங்கிரஸ் தரப்பில் இருந்த 2 தொகுதிகள் ஒதுக்குவது குறித்து இன்னும் உறுதி செய்யப்பட வில்லை என்றும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி, இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைமையை தொடர்பு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக., கூட்டணியில் பாமக.,வுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டதால், அதை விட அதிகமாக அல்லது அதே அளவு தொகுதிகள் வேண்டும் என்று கௌரவம் பார்த்து அடம்பிடித்தது தேமுதிக.,! இல்லாவிட்டால் பாமக.,வை விட தங்களை மட்டமாக நினைப்பார்கள் என்று கூறியது.
அதே நேரம், திமுக., கூட்டணியில் மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு 2 தொகுதிகளும் 1 தொகுதியும் மட்டுமே ஒதுக்கப்படுவதால், அவர்களை விட அதிகமாக தேமுதிக.,வுக்கு தொகுதிகள் ஒதுக்கப் படும் பட்சத்தில், தேமுதிக.,வுக்கு கௌரவமான இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள் திமுக.,வில் கூட்டணி குறித்துப் பேச்சு நடத்துபவர்கள்! திமுக., காங்கிரஸுக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளில் போட்டியிடும் கௌரவம் தேமுதிக.,வுக்கு கிடைக்கும் என்றும், மதிமுக.,வை விட அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்ற திருப்தி தேமுதிக.,வுக்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.