பிரதமர் நரேந்திர மோடி திங்கள் நள்ளிரவு முழுதும் விழித்திருந்து ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பின் மீதான துல்லியத் தாக்குதல் குறித்த விவரங்களைக் கேட்டபடியே இருந்து, கண்காணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
திங்கள் அன்று இரவு தாஜ் பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் பங்கேற்றார் மோடி! அங்கிருந்து இரவு 9.15க்கு வீட்டுக்குக் கிளம்பினார். அடுத்த 10 நிமிடத்தில் எண் 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பினார். இரவு உணவை முடித்துவிட்டு, பயங்கரவாத பயிற்சி முகாமை தாக்குவது குறித்த வான் தாக்குதல் தொடக்கப் பணிகளை கண்காணித்தபடி இருந்தார்.
பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்
தோவல், விமானப்படை தலைவர் பி.எஸ்.தானோவ் ஆகியோருடன் இந்த தாக்குதலுக்கு முன்பும் பின்பும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தார் மோடி.
தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து விமானங்களும் விமானிகளும் பத்திரமாக நாடு திரும்பிவிட்டார்களா என்பதைக் கேட்டுவிட்டு, அதன் பின்பே சற்று ஓய்வு எடுக்கச் சென்றார். இந்தத் தாக்குதலில் திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்து முடிந்ததா என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு அதன் பின்னரே, விமானத் தாக்குதல் விவகாரத்தில் இருந்து மீண்டு, தன் கவனத்தை மற்ற பணிகளில் செலுத்தினார் என்று பிரதமரின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
அதிகாலை 4.30க்கு இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்து
தெரிவித்ததுடன், தொடர்ந்து நேற்று பகல் முழுவதும் தனது அன்றாடப் பணிகளை கவனித்தார்.
2015-2018ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவருடன் கலந்து கொண்டுவிட்டு, பின்னர் மெட்ரோ ரயில் ஏறி இஸ்கான் அமைப்பின் பகவத் கீதை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பினார்.