பாகிஸ்தானில் சென்று, அங்கே செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று தனது கட்சித் தொண்டர்களுக்கு பாஜக., தலைமை உத்தரவிட்டுள்ளது.
இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதலை, பாஜக., அரசின் சாதனையாக கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். மன்மோகன் சிங் அரசிலோ, இதற்கு முந்தைய அரசிலோ, வெறுமனே கைகட்டி வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தனர் என்றும், மோடி அரசால் மட்டுமே இத்தகைய அதிரடி நடவடிக்கை எடுத்து, வலிமையான நாடாக நம்மை முன்னிறுத்த முடிகிறது என்றும் கருத்துகள் பரவி வருகின்றன. கட்சித் தொண்டர்களும் இது குறித்த பதிவுகளை இட்டு வருகின்றனர். மேலும், நிர்மலா சீதாராமனையும் பாராட்டி பல பதிவுகள் உலா வருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு பாஜக., தலைமை பிறப்பித்துள்ள உத்தரவில், பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்த விவகாரத்தில், ‘நாங்கள் தான் செய்தோம்’ என கூறி இதில் அரசியலை புகுத்தக் கூடாது. இந்தப் பெருமை ஒட்டுமொத்த நாட்டுக்கே சேரும். நாடே ஒன்றுபட்டு இந்த மகிழ்ச்சியை கொண்டாட வேண்டும். எனவே சமூக வலைதளங்களில் இறு குறித்தோ, தனிப்பட்ட நபர் குறித்தோ பதிவுகள் வெளியிடக் கூடாது. இது தொடர்பாக யாரும் அறிக்கையோ, பேட்டியோ அளித்து அரசியலாக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைமையின் இந்த உத்தரவை அடுத்து ஏற்கெனவே சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட சில பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. கட்சியின் அதிகாரபூர்வ பேச்புக், டிவிட்டர் பதிவுகளிலும் இது குறித்த பதிவுகள் நீக்கப் பட்டுள்ளன. குறிப்பாக, பாஜக., அரசியல் ஆக்குகிறது என்று, இதன் மூலம் அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறது என்றும் எதிர்க்கட்சியினர் பரவலாக குற்றம் சாட்டினர்.