பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவ தாக்குதல்
தொடரும் என்று முப்படை அதிகாரிகள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர்.
பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் வரை, அந்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய ராணுவ தாக்குதல் தொடரும் என்று முப்படை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் விமானங்களை முறியடித்தது குறித்தும், அதையடுத்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் டெல்லியில் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறினர்.
கடந்த பிப். 27-ஆம் தேதி அன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானங்கள், இந்திய ராணுவ நிலைகளை குறி வைத்தன என்று இந்திய விமானப்படை அதிகாரி ஆர். ஜி.கே. கபூர் குறிப்பிட்டார்.
அந்த விமானங்களை இந்திய விமானப்படை திறம்பட திருப்பி விரட்டி அடித்ததாக கூறிய அவர், இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் எப் 16 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது என்றார்.
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் தாக்கியதற்கு போதிய
ஆதாரங்கள் உள்ளன என்று கூறிய அவர், எப்-16 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்ட
ஏவுகணைகளின் மிச்சங்கள் இதற்கு ஆதாரம் என்றார்.
பின்னர் பேசிய ராணுவ அதிகாரி சுரேந்திர சிங், காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் 27-ஆம் தேதி அன்று குறி வைத்து தாக்கியது! விமானப் படைக்கு ராணுவமும் ஒத்துழைத்து பதிலடி தாக்குதல் நடத்தியது என்றார்
எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. பயங்கரவாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவிக்கும் வரை, பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய தாக்குதல் தொடரும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
பின்னர் பேசிய கடற்படை அதிகாரி டி.எஸ் குஜ்ரால், இந்திய கடற்படை பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க முழு வீச்சில் தயார் நிலையில் உள்ளது! கடலுக்கு அடியில், கடல் பரப்பில், கடலுக்கு மேலான வான்பரப்பில் என முப்பரிமாணத்திலும் தாக்குதல் நடத்த முழு வல்லமையுடன் இந்திய கடற்படை உள்ளது என்றார்.
இந்தியாவின் முப்படைகளும் முழுமையாக தயார் நிலையில் உள்ளன என்று மூவரும் தெரிவித்தனர்.