கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ்., பயங்கரவாதிகளை அழித்த பிரதமர் மோடியை அரக்கனை அழித்த நரசிம்மர் அளவுக்கு ஒப்பிட்டுப் பேசினார்.
துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசுகையில், “நமது பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்குப் பெரும் பயன் தரக் கூடிய திட்டங்களை வழங்க வந்திருக்கிறார். நாம் விரைவில் பெற இருக்கும் இமாலய வெற்றியின் தொடக்கம் இது. அண்டை நாடுகளின் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் நரசிம்ம அவதாரம் எடுத்தது போன்று நூற்றுக்கணக்கான பயங்கர வாதிகளை அழித்தார்.
நம் நாட்டை எதிர்க்க பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு அச்சுறுத்தல் இது. எதிர்க்கட்சிகள் பாராட்டும் அளவுக்குச் செயல்பட்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
துணிச்சலான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும் பிரதமர் நாட்டுமக்கள் நலனுக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இன்று புதிய பல திட்டங்களைக் கொண்டு வரும் மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவிக்கிறோம். கோடிக் கணக்கான ஏழை மக்களுக்கு மருத்துவ வசதி செய்யும் ஆயுஸ்மான் காப்பீடுத் திட்டம் கொண்டு வந்துள்ளார். அதுபோல ஜெயலலிதா முதலமைச்சரின் விரிவான காப்பீடுத் திட்டம் கொண்டு வந்தார். ஜெயலலிதா மற்றும் மோடியின் எண்ணங்கள் ஒன்று போல இருக்கின்றன” என்றார்.