மக்களாட்சியில், ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் போட்டி இருப்பது இயல்புதான். அவர்களை இவர்களும் இவர்களை அவர்களும் ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்ப்பதும் சகஜம்தான். ஒவ்வொரு கட்சிக்கும் அதிகார மோகமும் பதவி ஆசையும் இருப்பதும் இயல்புதான்.
ஆனால் தற்போது நடக்கப் போகும் தேர்தலின் பின்னணியில் கடந்த சில மாதங்களாக பல எதிர்க்கட்சிகள் ஒன்றாகக் கூடி ஏற்படுத்தும் அட்டகாசமும் இப்போது உள்ள அரசாங்கத்தை மீண்டும் வர விடக் கூடாது என்ற பிடிவாதமும் தீவிர நிலையை எட்டியுள்ளன.
சில காலம் முன்பு வரை மத்திய அரசிடம் நட்பாக இருந்த ஒரு மாநில தலைவர் தன் தனிப்பட்ட சுயநலத்திற்காகவும் தான் செய்த ஊழல்கள் வெளிப்பட்டு விடுமோ என்ற பீதியிலும் தோழமையை விலக்கிக் கொண்ட முறைமை அனைவரும் அறிந்ததே!
தன்னோடு ஒத்து ஊதும் ஊடகங்களின் உதவியோடு பொய்யையும் புனை சுருட்டையும் வாயில் வந்தபடி உளறிக் கொண்டு வீராப்பு காட்டும் விஷயமும் எல்லோரும் அறிந்ததே!
உண்மையில் தற்சமயம் நாட்டை ஆட்சி புரியும் அரசாங்கமும் தலைவரும் பாரபட்சமின்றி, வெளிப்படையாக, நியாயமாக, முழுமையான நாட்டு வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார் என்பது பல்வேறு உதாரணங்கள் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.
பகை நாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு எந்தவித பயமுமற்ற பாதுகாப்பு, நாட்டில் பயங்கரவாதமோ தீவிரவாதமோ நிகழாத அமைதி, எந்த ஒரு தனி மதத்திற்கும் கொம்பு சீவாமல் முழுமையான நாட்டு மக்களின் நலம், பொருளாதார மேம்பாடு, சுத்தம் சுகாதாரத்தில் முன்னிற்றல், நிலையான ஆட்சி, வெளிநாட்டு தொடர்புகளில் முன்னேற்றம், அகில உலகத்திலும் நம் நாட்டிற்கு உலகளாவிய புகழ், பலமான வெளிநாட்டு தூதரகங்கள், விவசாயத் துறைக்கு மானியங்கள், நாட்டுப் பண்பாட்டின் மேன்மை – இவற்றிற்காக இடைவிடாது உழைக்கும் தலைவரை கடந்த நான்கரை ஆண்டுகளாக நாடு பெற்றுள்ளது.
நாட்டின் முன்னேற்றமும் நாட்டை ஆளும் பொறுப்பும் தவிர மீண்டும் பதவிக்கு வருவதற்காக குள்ளநரித் தந்திரங்கள் செய்வது, இல்லாத பொல்லாத சலுகைகளை அறிவித்து கவர்ச்சிகரமான அறிக்கைகளை விடுவது போன்ற கீழ்த்தரமான அரசியல் செய்யாமல் உயர்ந்த தனி மனித விழுமியங்களை நாட்டு தலைமையாக இதுநாள்வரை பெற்றோம்.
ஆனால் ஊழலுக்குப் பழக்கப்பட்டு, கீழ்த்தர அரசியலே வழக்கமாகக் கொண்டு, அரசாட்சியை குடும்பக் குத்தகையின் அதிகாரமாக நினைத்து, சொந்த குலத்தின் முன்னேற்றத்திற்கு மட்டுமே உழைக்கும் தலைவர்கள் எல்லோரும் ஒன்று குவிந்து கூட்டணியாக மாறியுள்ளார்கள்.
வெளிநாட்டு தீய சக்திகளின் தாக்கம், அநீதியை அடிப்படையாகக் கொண்ட ஊடகங்களின் தீய பிரச்சாரங்கள் போன்றவற்றால் பொய்களைப் பல மடங்கு பெருக்கிக் கொண்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கோஷங்களாக்கி கூச்சலிடுகிறார்கள்.
இவ்விதம் பதவிப் பேராசையால் நாட்டு மக்களை மதங்களின் பெயராலும் குலங்களின் பெயராலும் வேற்றுமைப்படுத்தி சில மதங்களுக்கு மட்டும் ஹிரண்யாட்ச வரங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள்.
அரசாங்கத்தின் மீதும் நாட்டின் மீதும் சரியான புரிதல் இல்லாத சாமானிய மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள நம் நாட்டில் பல்லாண்டுகள் ஊழலில் அழுகிப்போன தலைமையே பழகிப் போனதால் உண்மையான முன்னேற்றத்தையும் சௌபாக்கியத்தையும் உணரவோ புரிந்துகொள்ளவோ தெரியாத அஞ்ஞானம் மண்டிக் கிடக்கிறது.
விவேகமற்ற முறையில் இலவசம் அளிக்கும் அறிவிப்புகளைச் செய்து மக்களை ஏமாற்றும் ஊழல் தலைவர்கள் மக்களின் இந்த அஞ்ஞானத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சிறிதளவாவது நன்மை எது தீமை எது என்ற விவேகம் இருக்கும் அறிஞர்கள் உண்மை நிலையை புரிந்து கொண்ட போதிலும் அந்த உண்மைகளை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தகுந்த அளவு பலனைப் பெற இயலாதவர்களாக உள்ளார்கள்.
அரசாங்க நியமங்களைக் கூட அவமதித்து இஷ்டம்போல் பிரச்சாரம் செய்வதால் காட்சி மற்றும் ஒலி ஊடகங்கள் மாசு பரப்பி நாட்டு முன்னேற்ற பலன்களின் மேல் விட்டில் பூச்சிகள் போல் படையெடுக்கின்றன.
இந்தக் கூட்டணிகள் மதமாற்றம் செய்யும் மதங்களின் உதவியைப் பெறுவதற்காக வீர தீரப் பிரதாபங்களை காட்டத் தொடங்கியுள்ளன.
இந்த அசுர சக்திகளின் கூட்டத்தால் உண்மையின் மேல் நிழலும் நேர்மையின் மேல் திரையும் விழுந்து மறைக்கின்றன.
இந்தப் பின்னணியில் நாடு மற்றும் தர்மத்தின் மேம்பாட்டுக்கு ஆதாரமான நல்ல அரசாட்சி மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்று நாட்டு முன்னேற்றத்தை விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
அவ்விதமாக பாரத நாட்டு மக்களின் புத்தியை வழி நடத்த வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போமாக!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
(ருஷிபீடம் – தெலுகு மாத இதழின் மார்ச் 2019 தலையங்கத்தின் தமிழ் வடிவம்)