அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், எரிக்ஸன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.550 கோடியை வட்டியுடன் அளித்து விட்டதாகக் கூறியுள்ளது.
தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிந்திருந்தது! நாளை அதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், அனிலின் சகோதரர் முகேஷ் இந்தத் தொகையைக் கொடுத்து அவரைக் கரை சேர்த்திருக்கிறார். இதற்காக தனது சகோதரர் முகேஷுக்கு அனில் அம்பானி நன்றி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எரிக்சன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகையான ரூ. 458.77 கோடியை அந்நிறுவனத்துக்கு வழங்கிவிட்டதாம். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாங்க எரிக்சன் நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்றது. ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ரிலையன்ஸ் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்துள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், ரூ.458.77 கோடியை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் எரிக்சன் நிறுவனத்துக்கு கொடுத்து விட்டது என தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ரூ.550 கோடி பணத்தை எரிக்சன் நிறுவனத்துக்கு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்தப் பணம் வராததால் ரூ.550 கோடி கடன் பாக்கியை பெற்றுத்தர எரிக்சன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது.
ரூ.550 கோடியில் சிறு பகுதி தொகையை மட்டும் வழங்கிய ரிலையன்ஸ், மீதி தொகையை கொடுக்காமல் ஏமாற்றியது.
இந்த வழக்கை கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், அனில் அம்பானி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளி என அறிவித்தது. நிலுவைத் தொகையான 453 கோடியை 4 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் இல்லையென்றால் 3 மாதத் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் எச்சரித்தது.
நீதிமன்ற அவமதிப்பிற்காக ரிலையன்ஸ் உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.