மதுரை சித்திரை திருவிழா உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தலை தள்ளி வைக்கக் கோரிய 3 மனுக்களையும் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!
17வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்.11ஆம் தேதி தொடங்கி,7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், இரண்டாம் கட்டமாக வரும் ஏப்.18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஏப். 18ஆம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. தேர்த் திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரா பௌர்ணமி விழாக்கள் நடைபெறுவதால், அன்று சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பெருவாரியான மக்கள் விழாக்களில் கலந்து கொள்வார்கள் என்பதால், தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுக்கப் பட்டது. இதற்காக மதுரை ஆட்சியரிடம் விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்!
இதை அடுத்து, மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப் பதிவுக்கு ஏற்பாடு செய்வதாகவும், வேறு ஒன்றும் இதில் செய்வதற்கில்லை என்றும் தேர்தல் ஆணையம் பதில் அளித்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்று வழக்குகள் தள்ளுபடி செய்வதாகவும், மதுரையில் வாக்குப்பதிவு நேரம் இரவு 8 மணி வரை நீட்டிப்பு செய்யப் படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறி, வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.