சிவகங்கை வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸுக்குள் கோஷ்டிப் பூசலும் மோதலும் வெடித்துள்ளது.
சிவகங்கை வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப் பட்டுள்ளார். இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. தொகுதிக்கு பெருமளவில் உதவிகள் செய்துள்ள சுதர்சன நாச்சியப்பனை விடுத்து, ஊழலிலும் பணபலத்திலும் புரண்டுள்ள கார்த்திக்கு போட்டியிட வாய்ப்பு கொடுப்பதா என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் தொண்டர்கள்.
இதை அடுத்து தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார் சுதர்சன நாச்சியப்பன். வெளிநாடுகளில் சொத்துகளைச் சேர்த்துள்ளவர் கார்த்திக் என்றார் அவர்.
இந்நிலையில், வேட்பாளரை காங்கிரஸ் தலைமை அறிவித்த பிறகு அவர் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை சுதர்சன நாச்சியப்பன் தவிர்க்க வேண்டும்; கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற அவரும் துணை நிற்க வேண்டும் என்று, அண்மையில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தியால் திடீரென விலக்கப் பட்ட திருநாவுக்கரசர் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது கூறினார்.
இந்நிலையில், தற்போதைய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று காலை செய்தியாளர்களிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினார். அப்போது அவர், சிவகங்கை தொகுதி வேட்பாளர் விவகாரத்தில், சுதர்சன நாச்சியப்பன் தகுதியான நபர் தான், அவர் கட்சி தலைமை எடுத்த முடிவின்படி நடக்க வேண்டும் என்றார்.
மேலும், நேற்று நடைபெற்ற சம்பவத்திற்கு செல்வப்பெருந்தகை வருத்தம் தெரிவித்தார் என்று கூறிய அழகிரி, முன்பு இருமுறை என்னை வேட்பாளராக அறிவித்து பிறகு மாற்றிய வரலாறு உண்டு என்று கூறினார்.
இருக்கும் 9 தொகுதியை மட்டுமே தரமுடிகிறது. மற்றவர்களுக்கு வருத்தம் வருகிறது. காங்கிரசில் தகுதி வாய்ந்த தலைவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
சுதர்சன நாச்சியப்பன் தகுதியானவர். ஆனால், கட்சி தலைமை எடுத்த முடிவை ஏற்க வேண்டும். விமர்சிப்பது கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராகவா ? அல்லது கட்சித் தலைமையையா ? என்பதை யோசிக்க வேண்டும்.
சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு 8 விருப்ப மனுக்கள் வந்திருந்தன. கட்சி தலைமை எடுத்த முடிவை எதிர்ப்பது சுதர்சன நாச்சியப்பனுக்கு அழகல்ல என்று கூறினார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.!
இருப்பினும், சிவகங்கை தொகுதியில் சுதர்சன நாச்சியப்பனால் பலன் பெற்ற காங்கிரஸ்காரர்கள் உள்ளக்குமுறலுடன் தான் காத்திருக்கிறார்கள்!