தேர்தல் என்றால் அது பிரசாரம் இல்லாமலா? தேர்தல் பிரசாரம் என்றால் அது சினிமா நட்சத்திரப் பட்டாளங்களின் பிரசாரம் இல்லாமலா!?
ஆனால் இந்த முறை சினிமா நட்சத்திரப் பட்டாளங்களின் அதிதீவிர பிரசாரம் எதுவும் இல்லாதது போல் இருக்கிறது. அதற்கு காரணம், சூடு பட்ட நடிகர்கள்தான்!
ஜெயலலிதா, கருணாநிதி இரு பெரும் சினிமா ஆளுமைகள் இருந்த வரை, சினிமாக்காரர்கள் அவர்களின் பக்கம் ஒதுங்கினார்கள்! விழா எடுப்பதும் வேண்டுகோள் வைப்பதும், அவர்கள் அழைத்தால் பிரசாரத்துக்குச் செல்வதும் என்று அதீத விசுவாசத்துடன் நடந்துகொண்டார்கள். ஆனால் விசுவாசத் தலை மு.கருணாநிதி முன்பு பொங்கிய பொங்கலால், சினிமாக்காரர்கள் சற்று பின்னோக்கி நகர்ந்தார்கள்.
திமுக.,வுக்காக நகைச்சுவை வடிவேலு களம் இறக்கப்பட்டு, விஜயகாந்தை குறிவைத்து மேடைகளில் அரசியல் பேசிய பின்னர், அவர் திரையுலகில் இருந்தே முற்றிலும் ஓரங்கட்டப்பட்டார். இன்னும் வையாபுரி, குண்டுகல்யாணம் போன்ற நகைச்சுவைகள்தான் அரசியல் மேடையில் வந்தனவே ஒழிய, பெரிய அளவில் நடிகர்கள் எவரும் அதன் பின்னர் அரசியல் திரைக்கு முன்னர் தோன்றவில்லை!
இந்நிலையில், இந்தத் தேர்தலிலும் அவ்வாறே நட்சத்திரப் பட்டாளங்கள் பெரிதும் களம் இறங்காமல் உள்ளது. அடிக்கும் வெயில் ஒருபுறம் என்றாலும், ஆளும் தரப்பு, எதிர்தரப்பு என்று நடிகர்களுக்கு உள்ளும் பிளவு ஏற்பட்டு விடுவது இன்னொன்று. இதை விட முக்கியமானது, சமுக ஊடகங்களின் தாக்கம்.
திமுக., தரப்புக்கு என்று சமூக ஊடக குழுக்கள் இயங்குவது போல், இந்து இயக்கங்களுக்கு என்றும் சமூக ஊடகக் குழுக்கள் வலிமையாக இயங்குகின்றன. அவற்றின் தாக்கம், நடிகர்களின் படங்களிலும் எதிர்கால வாழ்க்கையிலும் பலமாக எதிரொலிக்கின்றன. இதன் காரணத்தாலேயே, இப்போதெல்லாம் நடிகர்கள் பலரும் தீவிர அரசியல் பிரசாரக் களத்தில் இறங்கவே அச்சப் படுகின்றனர்.
இந்த விஷயத்தில், ஓய்ந்து விட்டதா நட்சத்திர அரசியல்? என்று மூத்த பத்திரிகையாளர் மாலன் தனது கருத்தை இவ்வாறு முன்வைக்கிறார்….
இந்தத் தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல்.நாளையோடு மனுத்தாக்கல் முடிவடைகிற்து. ஆனால் இதுவரை எந்த சினிமா நடத்திரமும் வேட்பாளராகக் களம் இறங்கவில்லை.
போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் போட்டியிடவில்லை. அனேகமாக எல்லாக் கட்சிகளிலும் சினிமா நட்சத்திரங்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
திமுகவில் உதய நிதி, காங்கிரசில் குஷ்பூ, பாஜகவில் எஸ்.வி.சேகர், அம்முகவில் சி.ஆர்.சரஸ்வதி, மய்யத்தில் ஸ்ரீபிரியா, கோவை சரளா, இப்படி. ஆனால் எவரும் களமிறக்கப்படவில்லை.ஆர்.கே.நகரில் போட்டியிட முனைந்த விஷால் கூட ஆளையே காணோம். கார்த்திக் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். சரத்குமாரின் ஆதரவை அதிமுக கோருகிறது. டி.ஆர்.அமைதி காக்கிறார்
அண்டை மாநிலமான கர்நாடகாவில் சுமலதா, பிரகாஷ் ராஜ் களமிறங்குகிறார்கள். வடக்கே ஹேமாமாலினி. ஆனால் தமிழகத்தில் யாரும் இல்லை. தமிழகத்தில் ஓய்ந்து விட்டதா நட்சத்திர மோகம்? – என்று கேள்வி எழுப்புகிறார்.!