நேற்று இரவு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சிதம்பரத்தின் குடும்பம் பற்றி சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்த கருத்துக்கள் குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தது.
இந்தக் குடும்பத்தை மக்கள் வெறுக்கிறார்கள் என அவர் சொல்லியிருந்தார்… அது உண்மையா, மிகையான கூற்றா எனக்குத் தெரியாது.
ஆனால் அப்படி இருந்தால் அதற்குக் காரணங்கள் இருக்கின்றன! எனக்கு நீட் தேர்வு தொடர்பான வழக்கின் போது நளினி சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கள் நினைவிற்கு வந்தன.
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அறிவித்து தமிழக அரசு ஓர்அவசரச் சட்டம் இயற்றியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள்.
அவர்களுக்காக ஆஜரானவர் திருமதி. நளினி சிதம்பரம். உச்ச நீதி மன்றம் தமிழக அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்தது!
வழக்கில் வென்ற நளினி சிதம்பரத்திடம் புதிய தலைமுறை ஒலி வாங்கியை நீட்டியது!
அப்போது அவர் சொன்னார்: “இனிமேல் அப்பீல் என்றால் இவர்கள் கடவுளிடம்தான் போக வேண்டும்”
நீட் தேர்வில் விலக்குப் பெற தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை வெற்றிகரமாக முறியடித்தவர் ப.சிதம்பரத்தின் மனைவியும், கார்த்தி சிதம்பரத்தின் தாயாருமான திருமதி.நளினி சிதம்பரம்!
– பத்திரிகையாளர் மாலன்