திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாகக் குறிப்பிட்டு … மற்றவர்களைப் போல் இல்லாமல், அடிமட்டத்தில் இருந்து வந்து முதல்வர் ஆனவன் நான் என்று பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கந்தன்சாவடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர்,
‘நாட்டின் முக்கிய பிரச்னைகளைத் தீர்க்கும் நாடாளுமன்றத்தில் உரிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் தீர்வு கிடைக்கும். திமுக அதைச் செய்யவில்லை. ஆனால் தமிழக மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முதலில் குரல்கொடுப்பது அதிமுக.,தான்!.
நீங்கள் (ஸ்டாலின்) அரசியலுக்கு வந்த வழி அனைவருக்குமே தெரியும். கஷ்டப்பட்டா நீங்கள் கட்சித் தலைவர் ஆனீர்கள்? கருணாநிதி முதல்வராக இருந்தார். திமுகவின் தலைவராகவும் இருந்தார். அந்தப் போர்வையில் கொல்லைப் புறத்தின் வழியாக பதவிக்கு வந்தவர் நீங்கள். கருணாநிதியின் மகனாக இருந்ததால் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
கட்சியில் உயர்ந்த பதவிக்கு வருவது என்றால், கிளைச் செயலாளர், ஒன்றிய, மாவட்டப் பொறுப்புகள், மாநிலப் பொறுப்பு என்று படிப்படியாக வர வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு மட்டத்திலும் என்ன பிரச்னை என்பது தலைவராக வரும்போது தெரியும். ஆனால் நீங்கள் அப்படியில்லை.
ஆக… உங்களுக்கு கட்சியிலும் ஒன்றும் தெரியாது. நாட்டு மக்களைப் பற்றியும் ஒன்றும் தெரியாது.
ஆனால் நான் அப்படியல்ல. கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். 1974-ல் நான் கல்லூரியில் படிக்கும்போதே, கிளைக் கழக செயலாளராக அரசியல் வாழ்க்கையை தொடங்கி படிப்படியாக எம்எல்ஏ, எம்.பி., அமைச்சர் என்று ஆனேன். இப்போது நீங்கள் எல்லாம் சேர்ந்து என்னை முதலமைச்சர் ஆக்கியிருக்கிறீர்கள். உழைப்பால் வந்தவன் நான். அதுதான் நிலைத்திருக்கும்” என்று உருக்கமாகப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அவரது பேச்சை பலரும் இப்போது சமூகத் தளங்களில் பகிர்ந்து, எடப்பாடிக்கு ஆதரவாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
அவற்றில் ஒரு கருத்து.. இது!
#எடப்பாடியார் ???? ராக்ஸ் …. நான் கூட்டமில்லாத இடத்தில் கையெடுத்து கும்பிடுவதாக ஸ்டாலின் கேலி பேசுகிறார். உச்சி வெயிலில் இங்கிருக்கும் கூட்டம் ஸ்டாலின் கண்ணுக்கு தெரிவதில்லை.
முதலில் நான் ஒரு தொண்டன்.பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் நடந்து வரும் போது தொலைதூரத்தில் இருந்து வணங்கிக் கொண்டிருந்த தொண்டன்.இன்று படிப்படியாக உயர்ந்து முதலமைச்சராகியுள்ளேன்.
ஒரே ஒருவர் சாலையோரத்தில் நின்றாலும் நான் எழுந்து கும்பிடுவேன்.அவர்களின் அன்பு என்னவென்று எனக்குத் தெரியும்.ஸ்டாலினுக்கு அது தெரியாது காரணம் அவர் வாழ்ந்த வாழ்வு அப்படிப்பட்டது. அவருக்கு மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை,முதல்வர் நாற்காலி மட்டும்தான் குறி.
நான் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். மக்களுக்கு என்ன மரியாதை தர வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எத்தனை பத்திரிக்கையில் படமெடுத்து போட்டாலும் சரி,யார் கேலி பேசினாலும் சரி, ஒரே ஒருவர் நின்று வணக்கம் சொன்னாலும் அவரை மதித்து நான் வணக்கம் சொல்லித்தான் வருவேன் அது தமிழர் பண்பாடு. – முதல்வர் #எடப்பாடி_பழனிச்சாமி