தூத்துக்குடிக்கு புல்லட் ரயில் வரும் என்று டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாக்குறுதி அளித்துள்ளார்.
தூத்துக்குடி தொகுதிக்கான நாடாளுமன்ற பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தமிழிசை பேசினார். அப்போது அவர் சில வாக்குறுதிகளையும் தூத்துக்குடி நகருக்கு அளித்தார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அறிக்கையை பா ஜ க வேட்பாளர் தமிழிசை செளந்திரராஜன் இன்று வெளியிட்டார்! அதனை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் பெற்றுக் கொண்டார்.
அந்த தேர்தல் அறிக்கையில்…
- தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப் பட்டு , இரவு நேரங்களில் விமானம் இறங்குவதற்கான நைட் லேண்டிங் வசதி ஏற்படுத்தப்படும்.
- தூத்துக்குடியில் இருந்து கொச்சி வரை நான்கு வழி சாலை அமைக்கப்படும்!
கன்னியாகுமரி – உவரி – திருச்செந்தூர் – தூத்துக்குடி – ராமேஸ்வரம் – புதுச்சேரி சென்னை வரை புதிய கிழக்கு கடற்கரை நான்கு வழி சாலை அமைக்கப்படும்.
கிழக்கு கடற்கரை ரயில்வே பாதையை அமைத்து கன்னியாகுமரி திருச்செந்தூர் தூத்துக்குடி ராமேஸ்வரம் புதுச்சேரி வழியாக சென்னைக்கு புல்லட் ரயில் விட நடவடிக்கை எடுக்கப்படும்.
தாமிரபரணி ஆற்றின் மூலம் திருநெல்வேலி தூத்துக்குடி இரண்டு மாவட்டம் சேர்ந்து மொத்தம் 88 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது, எனவே விவசாயிகளின் நலனுக்காக தாமிரபரணி வடி நில கோட்டத்தை இரண்டாகப் பிரித்து தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு கீழ் தாமிரபரணி வடிநிலக் கோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தாமிரபரணி ஆற்றில் வருடந்தோறும் 14 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மாவடி பண்ணை அருகில் மத்திய அரசின் நிதியைப் பெற்று, 900 கோடி ரூபாய் செலவில் 4 டிஎம்சி கொள்ளளவுள்ள நீர்த்தேக்கம் அமைக்கப்படும். இதன்மூலம் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் பயன்பெறும்.
தாமிரபரணி ஆற்றில் வெள்ள காலங்களில் வீணாகும் தண்ணீரை தாமிரபரணி ஆறு – கடனாநதி -சிற்றாறு – உப்போடை – கல்லாறு ஆகிய நதிகளை, மத்திய அரசின் நிதி 1600 கோடி ரூபாய் பெற்று இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். இதன் மூலம் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி ஓட்டப்பிடாரம் விளாத்திகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் பயன்பெறும்.
மருதூர் கீழ்க்காலை அகலப்படுத்த மத்திய அரசிடமிருந்து 118 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெற்று, சாயர்புரம் தேதியில் புதிதாக குளம் அமைத்து வெள்ள நீர் தேக்கி வைக்கப்படும். கோரம்பள்ளம் குளம் நீர் தேக்கமாக புனரமைக்கப்படும்.
மத்திய அரசின் மூலம் நிதி பெற்று பெரியதாழையில் ரூபாய் 200 கோடி ரூபாய் செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.
மத்திய அரசின் சார்பில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியை ரூபாய் ஆயிரம் கோடி செலவில் ஐஐடி, எய்ம்ஸ் போன்று உலகத்தரம் வாய்ந்ததாக்கி மீன்வள ஆராய்ச்சி கல்வி மையம் அமைக்கப்படும்.
புன்னக்காயலில் 56 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்படும் இதனால் கடல் உட்புகுதலை தடுத்து நிலத்தடி நீர் உப்பாகுதல் தடுக்கப்படும்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை திருப்பதி வேங்கடாசலபதி கோவிலைப் போன்று (Tirupati urban development authority) திருச்செந்தூர் அர்பன் டெவலப்மெண்ட்அத்தாரிட்டி என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, திருச்செந்தூர் நகரை புனரமைத்து அருள்மிகு சுப்பிரமணியசுவாமி பெயரில் பல்கலைக்கழகம் அமைத்து கல்வியை மேம்படுத்தி, பக்தர்களுக்கு தங்கும் வசதிகள் செய்து கொடுத்து திருப்பதி கோவிலைப் போன்று தன்னாட்சி அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுப்போம்.
நவதிருப்பதி தலங்கள் (ஒன்பது கிரகங்களுக்கான பெருமாள் கோவில்கள் ) அனைத்தும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவிலுக்கு செல்ல நல்ல 30 அடி அகல இரு வழி சாலை மற்றும் தங்கும் வசதி மத்திய சுற்றுலாத்துறை மூலம் அமைக்கப்படும்.
அதேபோன்று நவ கைலாய ஸ்தலங்கள் (ஒன்பது கிரகங்களுக்கான சிவன் கோவில்கள் ) தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்திலும் அமைந்துள்ளது இந்த கோவில்களுக்குச் சென்று வர 30 அடி அகல இருவழிச்சாலையும் தங்கும் வசதியும் மத்திய சுற்றுலாத்துறை சார்பாக அமைக்கப்படும்.
திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக தென்காசி To திருச்செந்தூர், மதுரை To திருச்செந்தூர் சாலை ஓரங்களில் தனியாக பாதுகாப்பான நடை பாதை அமைக்கப்படும்.
ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காக நவீன கப்பல் தொழில்நுட்ப முறை அறிமுகப் படுத்தப்படும் இந்த கப்பலில் மீன் பதப்படுத்தும் பணிக்காக 40 பேரும் இரண்டு டாக்டர்களும் 8 மணி நேர ஷிப்டு முறையில் பணியாற்றுவார்கள்.
கப்பல் கட்டுப்பாட்டில் 40 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் இயங்கும் மீனவர்களும் மீன் பதப்படுத்தும் ஊழியர்களும் 8 மணி நேரத்திற்கு ஒருமுறை கப்பல் நிற்கும் இடத்திற்கு படகில் அழைத்துச் செல்லப்படுவார்கள், கப்பல் மீன்கள் அதிகமாக உள்ள ஆழ்கடலில் நிலைநிறுத்தப்படும்.
மீனவர்கள் கப்பலை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் உள்ள மீன்களை பிடித்து கப்பலில் பதப்படுத்த ஒப்படைத்து தங்கள் மீன்களுக்குள்ள பணத்தை பெற்றுக் கொள்ளலாம்
இந்த கப்பல் பாதுகாப்பிற்காக கடலோர காவல்படை மற்றும் NAVY யுடன் தொடர்பில் இருக்கும், இந்த வசதி இந்தியாவிலேயே முதன்முறையாக சாகர்மாலா திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் ஏற்படுத்தப்படும்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விவசாய நிலங்களில் வாழை ,முருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை எனவே நெல் கரும்பு ஆகிய பயிர்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வது போன்று வாழை ,மற்றும் முருங்கைக்கு குறைந்த பட்ச ஆதார விலை(Minimum Support Price) அரசால் நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்
ஒவ்வொரு வட்டாரத்திலும் சோலார் பவர் மூலமாக cold storage அரசு செலவில் அமைத்து வாழை குலைகள் முருங்கைக்காய்கள் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கோரம்பள்ளம் குளத்தருகில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தி தண்ணீரை கோரம்பள்ளம் குளத்தை நீர் தேக்கமாக மாற்றி சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
மத்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ICAR) ஒன்று தூத்துக்குடியில் அமைத்து அதன் மூலம் தென்னை மரத்தில் குட்டை ரகம் கலப்பின முறையில் உருவாக்கியது போல பனைமரத்தில் வாரிய குட்டை DHARF உருவாக்கப்படும்
இதனால் பனையேறும் தொழிலாளி அதிக உயரம் ஏறத்தேவையில்லை, பனையேறும் தொழில் மேம்படுத்தப்படும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை ஓலை மூலமாக தயாரிக்கப்படும் ஓலைப்பெட்டி, நார் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் அமைக்கப்படும்!
இவ்வாறு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு , தூத்துக்குடியின் நலன் காக்கும் திட்டங்கள் உள்ள தேர்தல் அறிக்கையை தாம் தயாரித்ததாக பேசினார் தமிழிசை!
இந்த நிகழ்ச்சியில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், பாஜக., தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அரசகுமார், பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட பொதுச்செயலாளர் சிவராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.