சரவண பவனில் வேலை பார்த்த பணியாளரைக் கொலை செய்த வழக்கில், ஓட்டல் நிறுவனர் ‘அண்ணாச்சி’ ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம்!
சரவண பவன் பணியாளர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் அதிபர் அண்ணாச்சி ராஜகோபால் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். பூந்தமல்லி நீதிமன்றம் ராஜகோபாலுக்குப் பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றமும் இதை உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராஜகோபால் பிணையில் வெளியில் இருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், சரவண பவன் நிறுவனர் பி.ராஜகோபால் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
வழக்கின் முழு விவரம்…
நாகை மாவட்டம் வேதாரண்யத்தைந் சேர்ந்தவர் ஜீவஜோதி. உணவக மேலாளரின் மகளான இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். 2001-ஆம் ஆண்டு ஜீவஜோதியை மறுமணம் செய்யும் நோக்கத்தில் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று ராஜகோபால் தரப்பு கொலை செய்ததாகக் குற்றம் சாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. கொலைக்கு உடந்தையாக இருந்த டேனியல், கார்மேகம், ஹூசைன், காசி விஸ்வநாதன், தமிழ்ச்செல்வன், முருகானந்தம், சேது, பட்டுரங்கம் ஆகியோருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.
கடத்தல் வழக்கில் ராஜகோபாலுக்கு 3 ஆண்டும், மற்ற 8 பேருக்கு இரண்டு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளிலும் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் உள்ளிட்டவர்கள்அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.
அதே நேரம் அரசு தரப்பில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டும் என்று அப்பீல் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் 2009-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, பானுமதிஆகியோர் அடங்கிய அமர்வு, கீழ் நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிப்பதாக அறிவித்தது. மேலும், ராஜகோபால் தெளிவான நோக்கத்துடன் பயங்கர குற்றத்தை இழைத்திருப்பதாகவும், இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
இதை அடுத்து உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
தற்போது பிணையில் இருக்கும் ராஜகோபால், ஜூலை 7-ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.