தனக்கு குக்கர் சின்னம் வேண்டும், அது தனது வெற்றிச் சின்னம் என்று கேட்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிக் கொண்டிருந்தார் டிடிவி தினகரன். ஆனால் அவருக்கு ஒரு பரிசுப் பெட்டி சின்னம் கிடைத்திருக்கிறது. அதையும் அவரே தேர்ந்தெடுத்ததாகக் கூறப் படுகிறது. இந்நிலையில், அவர் கேட்ட அந்த குக்கர், இப்போது யாருக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது தெரியுமா?!
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளிவந்துள்ள அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்குத்தான் கிடைத்திருக்கிறது குக்கர்.
பசும்பொன் பாண்டியன் மதுரையில் போட்டியிடும் நிலையில், அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், டிடிவி தினகரனின் வெற்றிச் சின்னம், மற்றும் தினகரன் சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் ஓட்டுகள் அதனால் கிடைக்கும் என்று நம்புவதுதான்!
பசும்பொன் பாண்டியன் தற்போது, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் சார்பில் மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இருந்தாலும், அவர் சுயேச்சை வேட்பாளராகத்தான் கருதப் படுவார். எனவே சுயேச்சையான சின்னத்தில்தான் அவர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தேர்தல் அதிகாரி முன்னிலையில் இன்று சின்னம் ஒதுக்கும் பணி நடந்தது. அப்போது, பசும்பொன் பாண்டியனுக்கு குக்கர் சின்னம் கிடைத்தது.