Home இந்தியா திமுக., பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமானவரி சோதனை! ரகளையில் ஈடுபட்ட திமுக.,வினர்!

திமுக., பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமானவரி சோதனை! ரகளையில் ஈடுபட்ட திமுக.,வினர்!

திமுக பொருளாளர் துரைமுருகனின் வேலூர் வீட்டில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

வேலூர் காட்பாடி, காந்திநகர் பகுதியில் உள்ள திமுக.,வின் பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சனிக்கிழமை இன்று அதிகாலை 3 மணி முதல் காலை 8.30 வரை வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இன்று காலை இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலேயே, தனது மகனுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் நாடாளுமன்றத்தில் விட்டு விளாசுவார் என்று கூறினார். மேலும் ஹிந்தி, ஆங்கிலம் எதுவும் தெரியாமல், நாடாளுமன்றத்துக்கு செல்வதே வீண் என்று கூறினார் துரைமுருகன். .

மேலும், அறிமுகக் கூட்டத்தில் பேசிய போது, அதிக வாக்குகளைக் கொண்டு வரும் தொகுதி திமுக.,வின் பொறுப்பாளர்களுக்கு ரூ.50 லட்சம் சொந்தப் பணத்தில் இருந்து தருவதாக மேடையில் பகிரங்கமாக அறிவித்தார்.

இந்நிலையில் துரைமுருகன் வீட்டில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட இருப்பதாகவும், அதற்காக பெருமளவில் பணம், பரிசுப்பொருட்கள் சேகரித்து வைத்துள்ளதாகவும் தகவல் வந்ததைத் தொடர்ந்து, துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்த வந்துள்ளனர்.

வருமான வரித்துறை மற்றும் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு 10 மணிக்கு வந்துள்ளனர். அப்போது துரைமுருகன், அவர் மகன் கதிரானந்த் இருவருமே வீட்டில் இல்லை என அவர்களிடம் கூறப்பட்டுள்ளது.

மேலும் துரைமுருகனுக்கு நெஞ்சு வலி உள்ளிட்ட உடல் நலப் பிரச்னைகள் இருப்பதால் இந்நேரத்தில் சோதனை செய்ய வேண்டாம். நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரத் தயாராக இருக்கிறோம். நீங்கள் காலை நேரம் வந்து சோதனையைத் தொடங்குங்கள் என்று துரைமுருகன் தரப்பில் அதிகாரிகளுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கப் பட்டதாம். .

ஆனால், அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், துரைமுருகன் வீட்டு வாசலிலேயே காத்திருந்தனர். இதை அடுத்து அங்கே குவிந்த திமுக., தொண்டர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் காவல் துறைனா் பாதுகாப்புப் பணியை அங்கே பலப் படுத்தினர். இந்நிலையில் நள்ளிரவு 3 மணி அளவில் துரைமுருகன் வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.

இருப்பினும், பெரிதாக ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், சித்தூர் சாலையில் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிரானந்திற்கு சொந்தமான கிங்க்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. தொடர்ந்து வேலூரில் திமுக வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version