மதுரை, கும்பகோணம் மசூதிகளுக்கு வெளியே வாக்குச் சேகரிக்க சென்ற அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது தொடர்பில், சம்மந்தப்பட்ட மசூதிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், அ.திமு.க வேட்பாளர்களின் வாக்குச்சேகரிக்கும் உரிமையை நிலைநாட்ட வேண்டியும் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணைய சென்னை அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் பெயரில் இந்தக் கோரிக்கை புகார் மனு அளிக்கப் பட்டது. அதில்….
மதிப்பிற்குரிய இந்திய நாடாளுமன்ற தேர்தல் அதிகாரி – 2019 அவர்களுக்கு வணக்கம்!
மதுரை மாநகரத்தில் உள்ள பிரபலமான மசூதியில் தொழுகை முடிந்து வெளியே வருபவர்களிடம் அனைத்து கட்சியினரும், வேட்பாளர்களும் வாக்குச் சேகரிக்கின்றனர். ஆனால் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற அ.தி.மு.க வேட்பாளருக்கு மட்டும் அனுமதி மறுத்து எதிர்ப்பு தெரிவிப்பதோடு, மசூதியில் தொழுகையின் போது அ.தி.மு.க மற்றும் தமிழக அரசுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தையும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் அவதூறு பிரச்சாரத்தையும் பகிரங்கமாக மசூதியில் தொழுகை கூட்டங்களில் செய்கிறார்கள்.
மேற்கண்ட மசூதியின் நிர்வாகம் மத அடிப்படைவாதிகளின் பிடியில் சென்று விட்டது. தொழுகை, வழிபாடு போன்ற ஆன்மீக விஷயங்களை தாண்டி சட்ட விரோதமாக அரசியல் மேடையாக மசூதியின் தொழுகை கூட்டங்களை மாற்றி வருகின்றார்கள். இதன் காரணமாகத் தான் வாக்குச் சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளரும் அமைச்சர் செல்லூர் ராஜ் அவர்களும், திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அதிமுக-விலும் ஏராளமான முஸ்லீம்கள் அங்கத்தினர்களாக உள்ளனர். ஆனால் மசூதி நிர்வாகம் அ.தி.மு.க வேட்பாளரை திருப்பி அனுப்பி உள்ளது. இதன் காரணமாக அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும். சட்டப்படி குற்றமாகும்.
இதே போல கும்பகோணம் மசூதிக்கு வெளியில் வாக்குச் சேகரிக்கச் சென்ற அதிமுக அமைச்சர் கடும் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. அதிமுக கூட்டணி கட்சியினர் அங்கு நின்று கொண்டிருக்கும் போதே மசூதி ஒலிபெருக்கியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், தமிழக முதல்வர் எடப்பாடிக்கு எதிராகவும் வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலை தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும், ஒரு சில மசூதிகளில் நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்ட அரசியல் கட்சியும் இது குறித்து நேரடியாக புகார் செய்யவில்லை.
மத அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இத்தகைய மசூதிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் இது குறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்… என்று புகார் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தகவல் வெளியிட்டுள்ளார்.