திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்தது பற்றி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்தது வருமான வரித்துறை. துரைமுருகனின் வீடு, அவரது மகனின் பள்ளி, கல்லூரி, துரைமுருகன் நண்பரின் சிமெண்ட் கிடங்கு உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனை தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது. இதை அடுத்து துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வேலூர் – காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு, அவரது மகனுக்குச் சொந்தமான கல்லூரி, துரைமுருகன் மகனின் நண்பர் சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் குடோன், துரைமுருகனின் நட்பு வட்டம் மற்றும் திமுக., பொறுப்பில் உள்ளவர்களின் வீடுகள் என கடந்த 3 நாட்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் கோடிக்கணக்கில் மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப் பட்டது. தொகுதி வாரியாக பூத் வாரியாக பட்டியல் ஒட்டப் பட்டு பணம் கட்டுக் கட்டாக கைப்பற்றப் பட்டதால், வாக்காளர்களுக்குக் கொடுக்க வைத்திருந்த பணம் என்பதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் உறுதிப் படுத்தினர்.
இந்நிலையில், துரைமுருகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் ஆகியன தொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை அனுப்பி வைத்துள்ளது.
‘வருமான வரித் துறையினர் கைப்பற்றிய, 11.53 கோடி ரூபாய்க்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று துரைமுருகன் கூறினாலும், இந்த பிரச்னையில் இருந்து துரைமுருகன் அவ்வளவு எளிதில் வெளிவர முடியாது!.
‘பணம் பதுக்கி வைத்திருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைத்த பிறகுதான், ‘ஆபரேஷன் துரை’ சோதனைத் திட்டம் செயல்படுத்தப் பட்டது என்கிறார்கள். எனவே உறுதிப் படுத்தப் பட்ட தகவல்கள் தான் என்பதால், அதிகாரிகள் தெம்பாக இருக்கின்றனர்.
இந்நிலையில், வருமான வரித் துறையிடம் இருந்து அறிக்கை வந்ததும், தேர்தல் ஆணையம் பரிசீலித்து, தமிழக தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கும் என்று கூறப் பட்ட நிலையில், அறிக்கை அளிக்கப் பட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு குறித்து எந்நேரமும் எதிர்பார்க்கிறார்கள்!