சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்த தகவல்…
வாக்களிப்பு மையங்களையும், தேர்தலுக்கான செலவினங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
இன்று மாலை காணொளி மூலம் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள்/ஆணையர்களுடனும் ஆலோசனை நடத்துகிறோம்.
வருமான வரித்துறை சார்பில் இதுவரை 45 கோடியே 57 லட்சம் பணம் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறக்கும் படையினர் சார்பில் முறையான ஆவணங்கள் இல்லாத 94 கோடியே 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 520.65 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. (மதிப்பு – 138 கோடி)
இதுவரை 421 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது (மதிப்பு – 1.73 கோடி)
இதுவரை கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் – 10 ஆயிரத்து 198 லிட்டர் (மதிப்பு – 25 லட்சம்)
இதுவரை உரிமத்துடன் 19 ஆயிரத்து 655 ஆயுதங்கள்(துப்பாக்கி) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வந்துள்ள 10 கம்பெனி துணை ராணுவத்துடன் மேலும்,150 CAPF கம்பெனி படையினர் தேர்தல் பாதுகாப்பிற்காக வரவுள்ளனர். (1 கம்பெனி – 90 வீரர்கள்)
ஒவ்வொரு தொகுதியையும் 2 செலவின பார்வையாளர்கள் மற்றும் 1 பொது பார்வையாளர் கண்காணித்து வருகின்றனர் (மத்திய சென்னை – 3 செலவின பார்வையாளர்கள், தூத்துக்குடி – 2 பொதுபார்வையாளர்).
வெளிநாடு வாழ் இந்தியர்கள் 924 பேர் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
வருமான வரித்துறையினரால் வேலூர் காட்பாடி பகுதியில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணத் தொகை யாருக்கு சொந்தமானது என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. ஆவணங்கள் பற்றி விரிவான ஆய்வு முடிந்தபின் விவரங்கள் தெரியவரும்.
பறக்கும் படையினரால் பொதுமக்கள் பணம் அதிகளவு கைப்பற்றப்படவில்லை, முறையான ஆவணங்கள் உள்ள பணம் திருப்பி அளிக்கப்படுகிறது. ஆவணங்கள் முறையாக இல்லாத பணம் மட்டுமே கைப்பற்றப்படுகிறது.
தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கக் கூடிய அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தபால் ஓட்டு மூலம் அடுத்தக்கட்ட தேர்தல் பயிற்சியின்போது வாக்களிக்கலாம், அதற்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று அறிமுகப் படுத்தப்பட்ட “POLL MONITORING” செயலி மூலம் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணிகள் முழுமையாக கண்காணிக்கப் பட்டு, அதன் விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். மாற்றுத் திறனாளிகளை பொறுத்தவரை வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள் 3.65 லட்சம் பேர் உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
சி-விஜில் செயலி மூலம் 1700 புகார்கள் வந்துள்ளது, அதில் 696 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 20 புகார்கள் நிலுவையில் உள்ளன, மேலும் 533 புகார்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது… என்று கூறினார்.