தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மனுவை லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான ரூட் க்ளியர் ஆகியிருக்கிறது.
இந்திய வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, அதைக் கட்டாமல் லண்டனுக்கு தப்பி ஓடியவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. காங்கிரஸின் தயவில் மாநிலங்களவை எம்.பி ஆனவர். காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில், ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது, பெருமளவில் கடன் வாங்கி பின்னர் மோடி அரசு அமைந்ததும், கடன்களைக் கட்டாமல் கம்பி நீட்டினார்.
இந்நிலையில், அவர் மீது அரசு சார்பில் வழக்கு தொடுக்கப் பட்டது. வங்கிக்கடன் மோசடி வழக்கில், விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு ஏற்கெனவே லண்டன் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், லண்டன் நீதிமன்றத்தின் உத்தரவை பல்வேறு காரணங்களைக் கூறி தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்து, விஜய் மல்லையா ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
இருப்பினும், விஜய் மல்லையாவின் மனுவை ஏற்க மறுத்த லண்டன் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
இதனால், மல்லையாவை இந்தியா அழைத்து வரும் அரசின் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது, மல்லையாவை வைத்து பொய்களைக் கட்டவிழ்த்து விட்டு பிரசாரம் செய்து வரும் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.