வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மறைவிட பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த பிப். 26ம் தேதி குண்டு வீசின.
இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியது.
மேலும் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர்.
எங்களுக்கு கிடைத்துள்ள உளவுத் தகவல்களின்படி வரும் 16 முதல் 20-ம் தேதிக்குள், இந்தியா மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி தெரிவித் திருந்தார்.
இந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டி அளித்தார். அப்போது இம்ரான் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி:
நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சு நடத்த சிறந்த வாய்ப்புள்ளது. மேலும், அடுத்த இந்திய அரசு காங்கிரஸ் தலைமையில் இருந்தால், பாகிஸ்தானுடன் பேசுவதற்கு பயப்படும், பாஜக., வெற்றி பெற்றால், காஷ்மீரில் ஒரு விதத்தில் தீர்வு கிடைக்கும் என்று இம்ராான் நம்புகிறார்.
மோடியை இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுடன் ஒப்பிட்ட இம்ரான் கான் இரு தலைவர்களும் பயம் மற்றும் தேசியவாத உணர்வு அடிப்படையிலான தேர்தல் பிரசாரம் செய்கின்றனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு நில உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 35-வது பிரிவை அகற்றுவதற்கான பா.ஜ.க. வாக்குறுதி, இம்ரானுக்கு ஒரு முக்கிய கவலையாக இருக்கிறது.
காஷ்மீரில் நடப்பது அரசியல் போராட்டம். அதற்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது.
பாகிஸ்தானிலிருந்து பயங்கர வாதிகள், எல்லை தாண்டி காஷ்மீருக்குள் புகுந்தால், அது இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு வழி வகுக்கும். இதனால், கடைசியில் பாதிக்கப்படப்போவது காஷ்மீர் மக்கள்தான் என்று கூறினார் இம்ரான் கான்… என அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.