தனது கணவர் மரணத்தில் திமுக தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக, ஜனாதிபதியிடம் சாதிக் பாட்சா மனைவி திடீர் புகார் தெரிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்பு உடையவரும், மு.க.ஸ்டாலின், ஆ. ராசா ஆகியோரின் நெருங்கிய நண்பராகவும் அறியப்பட்ட சாதிக் பாட்ஷா 2011 மார்ச் 16ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.
அவரது மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, சாதிக் பாட்ஷாவின் மரணம் தற்கொலை என்றும், தூண்டுதல் மற்றும் கட்டாயப் படுத்தலின் பேரில் நெருக்கடிக்கு மத்தியில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது என்றும் கூறியது. இந்நிலையில், அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சாதிக் பாட்ஷா குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், சாதிக் பாட்சா மறைந்து 8 வருடம் கடந்த நிலையில், அவரது நினைவுநாளில் குடும்பத்தினர் சார்பில் ஒரு நினைவு அஞ்சலி விளம்பரம் பத்திரிகைகளில் கொடுக்கப் பட்டது. அதில், கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இலக்கணமாய் திகழ்ந்ததாக குறிப்பிடப் பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி சாதிக் பாட்சா மனைவி ரேகா பானு பயணம் செய்த கார் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதை தொடர்ந்து சாதிக் பாட்ஷா மரணம் குறித்த மறு விசாரணை கோரிக்கை வலுவடைந்தது.
இந்நிலையில் ரேகா பானு இந்த விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரிடம் மனு அளித்துள்ளார். அதில், தனது கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள் கணவர் சாதிக் பாட்ஷாவின் மரணத்திற்கு காரணமாக இருக்க வேஎண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்தினால் இதற்கு பின்னணியில் உள்ள அரசியல் கட்சி குறித்து தெரியவரும்.’
2 ஜி ஊழல் வழக்கு விசாரணையின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆ. ராசா ஆகியோரது பெயர்களை சாதிக் பாட்ஷா கூறியிருந்தார். அதை அடிப்படையாக வைத்து அவர் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தப்பட்ட வேண்டும். என் குடும்பத்தின் இழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவைக்கான மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல்கள் நடைபெறும் நிலையில், சாதிக் பாட்ஷா மரணம் குறித்து மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், அது தொடர்பாக திமுக., மற்றும் ஸ்டாலினிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ரேகா பானு புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.