கருணாநிதி மகள் செல்வி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை!
டிடிவி தினகரனின் அமமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சியினர் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்ததால் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக கருணாநிதியின் மகள் செல்வி மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவுசெய்யப் பட்டுள்ளது.
திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து நேற்று மாலை சூளைமேடு பகுதியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி வாக்கு சேகரித்தார். அப்போது அமமுக., கூட்டணிக் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் தெகலான் பாகவியை ஆதரித்து அக்கட்சியைச் சேர்ந்த ஹசீனா பேகம், ரிஷ்வானா பேகம் என இருவர் அதே பகுதியில் வாக்கு சேகரித்து வந்தனர்.
அப்போது அவர்கள் வாக்காளர்கள் பட்டியல் வாங்கி டோக்கன் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து, செல்வி உட்பட திமுக.,வினர் அவர்களைத் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால், இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக திமுக.,வின் 108வது வட்டச் செயலாளர் திருமலை என்பவர் சூளைமேடு காவல் நிலையத்திலும் தேர்தல் அதிகாரிகளிடமும் புகார் அளித்தார்.
இதை அடுத்து, ஹசீனா பேகம், ரிஷ்வானா பேகம் இருவர் மீதும் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது, அவதூறாகப் பேசுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அது போல், எஸ்டிபிஐ., கட்சியைச் சார்ந்த ஹசீனா பேகம் அளித்த புகாரின் பேரில் கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் திமுக பிரமுகர் திருமலை ஆகியோர் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தைகளால் பேசுவது ஆகிய இரு பிரிவுகளில் சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.