இந்திய அரசு கங்கையைச் சுத்தப்படுத்தி மாசுகளை அகற்றும் திட்டத்தை அறிவித்தது. 2019-20-ம் ஆண்டிற்குள் 20,000 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தினை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. கடந்த 13-ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தேனி வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, “கங்கையைப்போல வைகையையும் தூய்மைப்படுத்துவோம்” என்று உறுதிமொழி அளித்திருக்கிறார்.
நதிகளையொட்டியே மனித நாகரீகம் வளர்ந்ததும், மனிதனின் வாழ்வாதாரத்துக்கு நதிசமவெளிகளும், நதிநீரும் முக்கியப் பங்காற்றி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும், மற்றெல்லா நதிகளைவிட, வைகை நதி மீதான, வைகை -பள்ளத்தாக்கு-சமவெளியில் வாழ்ந்துவரும் மக்களின் சார்புநிலை மிக முக்கியமானது.
அதைவிட முக்கியமான தனித்துவம் என்னவென்றால், ஆண்டுக்கு சுமார் இருபது நாட்களே மழைநீர் வரத்து இருக்கும் நதியை ஒட்டி, மனிதன் வேட்டையாடி வாழ்ந்து கொண்டிருந்தபோதே, வைகை சமவெளியில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
புராண காலத்திலிருந்தும், அதற்குப் பின், சங்க காலத்திலிருந்தே வைகை நதிநீர் மேம்பாடு என்பது இங்கு கோலோச்சிய அரசர்களின், குடிமக்களின் வாழ்க்கை முறையாக இருந்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 39,000 ஏரிகளும், 3,000 கோயில் குளங்களும், 5,000 ஊருணிகளும் இருந்திருக்கின்றன. தமிழகத்தில் உள்ள மிகப் பெரும் ஏரிகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை.
எடுத்துக்காட்டாக 3 மில்லியன் கன மீட்டருக்கு மேல் கொள்ளளவு கொண்ட ஏரிகள் 116 ஏரிகளில் 6 மட்டுமே கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் அமைக்கப்பட்டவை. மீதி அனைத்தும் அதற்கும் முன்பே உருவாக்கப்பட்டவை.
தமிழகத்தில் உள்ள மொத்த ஏரி, குளம், கண்மாய், ஊருணிகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு இன்றுள்ள பெரிய அணைக்கட்டுகளில் தேக்கப்படும் நீரின் மொத்த கொள்ளளவைவிட அதிகம்.
உதாரணமாக, வைகை அணையின் கொள்ளளவு 614 கோடி கன அடி; செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 364 கோடி கனஅடி. 37 கண்மாய்கள் இருந்த மதுரையில் இன்று 7 கண்மாய்கள் மட்டுமே உள்ளன. மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை இருக்கும் இடம், முன்பு உலகனேரி கண்மாயாக இருந்தது. மதுரை மாநகராட்சி, சட்டக் கல்லூரி, வணிக வரி அலுவலகங்கள் தல்லாகுளம் கண்மாயின் மேல்தான் அமைந்துள்ளன.
பழங்காலத்திலிருந்தே, ஊருக்கு நடுவே ஒரு கோயில், கோயிலையொட்டி ஒரு குளம், கோயிலைச் சுற்றி ஊரின் பல தெருக்கள், குளத்துக்கு நீர்வரத்து, பெரிய கண்மாய் அல்லது ஆறு ஆகியவற்றிலிருந்து கால்வாய் அல்லது ஊருணியாக குளம் அல்லது மழை நீர் சேகரமாகி குளத்தை நிறைப்பது என்ற அமைப்புகள் இருந்தன, அல்லது உருவாக்கப்பட்டன.
இவ்வகையான நீர்நிலைகள் அனைத்தும் கால்வாய்களால் ஆறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, நதிநீர் மேம்பாடு, நதிநீர் இணைப்பு என்பது, வைகையைப் பொறுத்தமட்டில் இந்நதியுடன் இணைந்துள்ள கண்மாய்கள், அவற்றின் இணைப்புக் கால்வாய்களையும் கணக்கில் கொண்டு திட்டமிடப்பட்டால் மட்டுமே, பயன்தரக்கூடிய ஒன்றாக இருக்கக்கூடும்.
- மு.ராம்குமார் (புவியியல் வல்லுநர், பேரா. பெரியார் பல்கலை)