நகைகளுடன் மாயமான வங்கி ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார்.
புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த மாரிமுத்து என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன் திடீரென மாயமானார். அவருடைய கார் மட்டும் எரிந்த நிலையில் அருகே கண்டெடுக்கப்பட்டது. அந்த இடத்தில் வங்கி ஆவணங்கள் சிசிடிவி ஹார்டிஸ்க் ஆகியவையும் எரிந்த நிலையில் காணப்பட்டன! எனவே இதை எடுத்து வங்கியில் அடமானம் வைக்கப்பட்டு இருந்த நகைகளுடன் மாரிமுத்து மாயமானார் என்று தகவல் தெரியவந்தது.
இந்த தகவல் அறிந்த உடன் தங்கள் நகைகளை பத்திரமாக இருக்கிறதா என்று அறிவதற்காக அடமானம் வைத்திருந்தவர்கள் வங்கியை முற்றுகையிட்டனர்.
இந்நிலையில் இது குறித்து தாமதமாக அறிந்த வங்கி அதிகாரிகள் எவ்வளவு நகைகள் காணாமல் போயின என்பது குறித்து மூன்று நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர். முறையாக கணக்கெடுப்பு முடிந்ததும் வங்கியின் சார்பில் மாரிமுத்து மேல் புகார் அளிக்க முடிவு செய்து இருந்தனர்!
இந்நிலையில் மணமேல்குடி அருகே கோடியக்கரை கடற்கரை பகுதியில் அழுகிய நிலையில் ஓர் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அது மாரிமுத்துவின் உடல் என்று பின்னர் தெரிய வந்தது.
நகைகளுடன் மாரிமுத்து மாயமாகி விட்டார் என்று போலீசாரும் வங்கி அதிகாரிகளும் நினைத்து இருந்த நிலையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா தற்கொலை செய்து கொண்டாரா என கணேஷ் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்! அவர் எடுத்துச் சென்ற நகைகள் என்ன ஆயின என்பது குறித்தும் புரியாத புதிராக மர்மம் நிலவுகிறது!