தமிழகத்தில் அண்மைக் காலமாக அட்சய திரிதியை என்பது மிகவும் பிரபலமாகி வருகிறது. அட்சய திரிதியை அன்று தங்க நகை வாங்கினால், வீட்டில் நகை பெருகும், தங்கம் வளரும் என்று நகைக்கடைக்காரர்கள் விளம்பரம் செய்ததன் விளைவு, நகைக்கடைகளை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்னர் இல்லாத வழக்கம் இது என்று பிரமிப்புடன் பார்க்கின்றனர் மூத்தவர்கள் சிலர். ஆனால், நகைகளின் மீதும் தங்கத்தின் மீதும் ஆர்வமும் ஆசையும் வெறியும் கொண்ட பெண்களின் ஆசையைத் தூண்டுவிடும் விதமாக, நகைக்கடை விளம்பரங்கள் அமைந்துள்ளதால், பெண்கள் கூட்டம் அதற்கு மயங்கித்தன போயுள்ளது.
இன்று அக்ஷய திரிதியை என்பதால் சென்னையில் உள்ள நகைக்கடைகளில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சித்திரை அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாவது வளர்பிறை நாளே, அக்ஷய திரிதியை நாள்.
இன்று அக்ஷய திரிதியை நாள் என்பதால் காலை 6 மணிக்கு உள்ளாகவே சென்னையில் பெரும்பாலான நகைக்கடைகள் திறக்கப் பட்டு விட்டன. சென்னைதான் என்றில்லை, தமிழகத்தின் சின்னச் சின்ன ஊர்களிலும் கிராமங்களிலும் கூட இன்று நகை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. கடைகளும் அதிகாலையே திறந்துவிடுவதால், மக்களும் காலை முதலே நகைகளை வாங்க நகைக்கடைகளில் குவிந்தனர்.
ஆண்டுதோறும் அக்ஷய திரிதியை நாளில் நகை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வருடம் நகை விற்பனை அதிகரிக்கும் என்று கூறப் படுகிறது.
இதனிடையே அட்சய திருதியை ஜோக்குகளும் அதிகம் உலா வருகின்றன. அக்ஷய திருதியைக்கு தங்கம் வாங்கினா நாத்தனார் மாமியார் நல்லா இருப்பாங்கன்னு மட்டும் யாராவது சொல்லட்டும்… அப்புறம் பாருங்க ஒரு ஈ,காக்கா கூட நகைக்கடையை எட்டிப்பார்க்காது என்பதுதான் உள்ளர்த்தம் பொதிந்த டாப் ஜோக்!