மே 23ஆம் தேதி தில்லியில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் என்று உங்களுக்கு யார் சொன்னது என்று பதில் கேள்வி கேட்டு செய்தியாளர்களையே அலறவிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தமிழகத்தில் திமுக., கூட்டணி அதிக இடங்களை வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளதால் அதுகுறித்து கருத்து கேட்க, திமுக, தலைவர் மு.க.ஸ்டாலினின் இல்லத்துக்கு சென்றனர் செய்தியாளர்கள்.
சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதி வாழ்ந்த இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலினிடம், தேர்தலுக்குப் பிந்தைய கருத்து
கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக இருப்பது குறித்து கேள்வி கேட்டனர்.
அதற்கு ஸ்டாலின், ஊடகங்களில் வெளியாகும் கருத்து கணிப்புகள் சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை என்று பதிலளித்தார். தொடர்ந்து, மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் திமுக அதில் பங்கு பெறுமா என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், அதற்குரிய விளக்கத்தை மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு சொல்வதாகக் கூறினார்.
தொடர்ந்து, மே 23ஆம் தேதி தில்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்குபெறுமா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், மே 23ஆம் தேதி தில்லியில் கூட்டம் என யார் சொன்னது என எதிர்க்கேள்வி எழுப்பினார்.
அவரது எதிர்க்கேள்வியால் மயக்கமடையாத குறையாய செய்தியாளர்கள் அங்கிருந்து வெளிவந்தனர்.