ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ரிசாட் – 2 பி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வேளாண்மை, வனச் சூழல், பேரிடர் மேலாண்மை ஆகிய பயன்பாட்டுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ ரிசாட் – 2 பி செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தியது.
இந்த ரிசாட் 2-பி செயற்கைக்கோளானது 615 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ரிசாட் 2-பி செயற்கைக்கோளானது விண்ணில்557 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
ரிசாட்-2பியில் உள்ள ரேடார் கருவிகள் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டவை. இரவு, பகல் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் பூமியைத் தெளிவாக படம் பிடித்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப முடியும். பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கு இந்த செயற்கைக்கோள் பயன்படும்.
சரியான பாதையில் பயணித்த ராக்கெட், ரிசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளை புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ராக்கெட் ஏவப்படுவதைப் பார்க்க ஏவுதளத்தில் பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இஸ்ரோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள், தகுந்த பாதுகாப்புடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்ததை திறந்த வெளி அரங்கில் அமர்ந்த படி கண்டுகளித்தனர்.
பிஎஸ் எல் வி சி46 ராக்கெட் விண்ணில் செலுத்தப் பட்ட காணொளி…