சேலத்தில் வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயதுக் குழந்தை கடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே தனிப்படை போலீசார் அதனை மீட்டனர்.
சேலம் மாவட்டத்தின் மையப்பகுதியான சத்திரம் அருகே உள்ள முள்ளாகாடு பகுதியில் பாலாஜி, நித்யா தம்பதியினர் 2 மகன்களுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே சாலையோரம் விளையாடி கொண்டிருந்த மூன்று வயது குழந்தை யோகேஸ்வரனை அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் கடத்தி சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையறிந்த பெற்றோர்கள் பதறிபோய் செவ்வாய்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனிடையே குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரைப் பெற்றுக் கொண்ட சேலம் மாநகர காவல் ஆணையர், உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்தார்.
பின்னர் எப்படியும் கடத்தப் பட்ட குழந்தையை விரைவில் கண்டு பிடித்து விடுவோம் என்றும், அப்பகுதியில் உள்ள 5 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யப் போவதாகவும் காவல் துறை அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் டூ வீலரில் கடத்தப்பட்ட குழந்தையை சேலம் முள்ளகாடு பகுதியில் போலீஸார் பத்திரமாக மீட்டுள்ளனர். போலீஸார் தேடுவதை அறிந்து, குழந்தையைக் கடத்தியவர்கள் சேலத்தாம்பட்டி பகுதியில் அந்தக் குழந்தையை விட்டுச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து, குழந்தையைக் கடத்தியவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். மாநகர காவல் துறை சார்பில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாததால் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறினர்.
மாநகரம் முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாநகர காவல் துணை ஆணையர் தங்கதுரை நேரில் பார்வையிட்டார்.
இந்த சாலையில் மாநகர காவல்துறை சார்பில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்காமல் இருப்பதால் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் திணறி வருவதாகக் கூறப் படுகிறது.