நாய் வாயில இருக்குற தேங்காயை சாமிக்கும் உடைக்க முடியாது; சட்னிக்கும் அரைக்க முடியாது என்பது கிராமத்துப் பழமொழி. இது போன்ற நிலைக்குத்தான் ஆளாகியிருக்கிறது தமிழகத்தில் திமுக., கூட்டணி பெற்ற வெற்றியும்!
தமிழ் இலக்கியங்களில் பழமொழி நானூறு என்று ஒரு நூல், அதில் 260வது பாடல்… கருமியின் செல்வம் என்ற தலைப்பில் உள்ளது.
முழக்கமிட்டு வீழும் அருவிகளும், மூங்கில்கள் முற்ற அவற்றினின்றும் உதிரும் முத்துக்களும் ஆகிய வளமுடைய மலைநாடனே… தான் பெற்ற செல்வத்தை வறுமையாளர்க்கு வழங்கித் தருமஞ் செய்தலும், தான் அநுபவித்து வாழ்தலும் என்ற பயனுள்ள செயல்களைச் செய்யும் தெளிவற்றவன் பெற்றுள்ள முழங்கும் முரசுகளை உடைய அரசரோடு ஒத்த செல்வமானது, நாய் பெற்ற முழுத் தேங்காயோடு ஒப்புடை உடையதே ஆகும்… என்று கூறுகிறது பாடல்.
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கும் முரசுடைச் செல்வம்–தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம்… என்பது பழமொழி நானூறு காட்டும் பாடல். இதில், நாய் பெற்ற தெங்கம் பழம் என்பது பழமொழி!
நாய்க்குக் கிடைத்த முழுத்தேங்காயை அதனாலும் தின்ன முடியாது; பிறர் எடுத்துச்சென்று அநுபவிக்கவும் அது விடாது. அதனைப் போன்றே கருமியின் செல்வமும் அவனுக்கும் பிறர்க்கும் பயன்படாமல் அழியும் என்பது கருத்து.
தெங்கம் பழம் – என்பது, தென்னை நெற்று முற்றிய தேங்காய் என்று பொருள்.
அது போன்றுதான் இப்போது தமிழக வாக்காளர்கள் திமுக.,வுக்கு ரொம்பவே யோசித்து ஓட்டுப் போட்டுக் கொடுத்துள்ள வெற்றியும்.
திமுக., கூட்டணி பெற்றுள்ள இந்த வெற்றியால், தமிழகத்துக்கு எந்த நலனும் விளையப் போவதில்லை. மாறாக, மீண்டும் மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து அரசியலுக்காக கோஷம் போட்டு, எதிர்ப்புக் கூட்டம் நடத்தி, மக்களைத் தூண்டிவிட்டு, எந்த உருப்படியான திட்டங்களும் தமிழகத்துக்கு வரவிடாமல் செய்ய மட்டுமே முடியும்!
திமுக., கூட்டணி பெற்றுள்ள இந்த வெற்றியால், திமுக.,வுக்கும் பலன் கிடைக்காது! நாட்டுக்கும் பலன் இல்லை! கடந்த தேர்தலிலும் இதே போன்று, தமிழக வாக்காளர்கள் 37 தொகுதிகளிலும் அதிமுக.,வை வெற்றி பெறச் செய்தனர். ஆனால், அதனால் தமிழகத்துக்கு எந்த நலனும் விளையவில்லை! காரணம், மத்திய அமைச்சரவையில் தமிழர்களின் பங்கு இல்லாமல் போனது. பொன்.ராதாகிருஷ்ணன் ஒருவர் மட்டுமே அமைச்சராக இருந்து அவர் அளவில் ஏதோ செய்தார் என்றாலும், பலம் இன்றி போனது.
அதே போன்ற நிலை தற்போதும் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. அதிமுக., கூட்டணியில் ஒருவர் வெற்றி பெற்றாலும், அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வோம் என்று பாஜக., கூறியுள்ளது. ஆனாலும், அந்த வாய்ப்பு அதிமுக.,வுக்குக் கிடைக்குமா என்பது கேள்விக் குறிதான்!
நீ வாழா வெட்டியா இருக்கப் போறே…
நான் வெட்டியா வாழாம இருக்கப் போறேன்…
தமிழகத்தில் மட்டும் விசித்திரமான எண்ண ஓட்டம் உள்ளது. மாநிலத்தில் ஆளும் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருப்பார்கள். திமுக., மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தால், மாநிலத்தில் அதிமுக., ஆட்சி நடக்கும். அதனாலேயே மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு எதிர்க்கும்.
அது போல், மத்திய அமைச்சரவையில் அதிமுக., இடம்பெற்றால், மாநிலத்தில் திமுக., ஆட்சியில் இருக்கும். அது அரசியல் காழ்ப்புணர்வில் அதிமுக., மூலம் வரும் திட்டங்களை எதிர்க்கும். இப்படிப் பல திட்டங்கள் தமிழகத்தை விட்டு மற்ற மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. இருக்கும் திட்டங்களையும் அரசியல் செய்து, அவற்றுக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, வாக்குகளைப் பெறுவதற்கு இங்குள்ள எதிர்க்கட்சிகள் முனையும்…! அதுதான் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நடக்கப் போகிறது!
தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவர்க்கோர் குணம் உண்டு என்பதை மீண்டும் மெய்ப்பித்து, நாடே ஒரு புறம் சிந்திக்கு போது தமிழன் மட்டும் தனியே எதிர்மறையாக சிந்திப்பான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது!