ஓசூர் பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு பிறகு முட்டை கோஸ் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி நல்ல மண்வளமும், சீரான சீதோஷ்ன நிலையும் நிலவுவதால் தக்காளி, பீட்ருட், கேரட், முட்டைகோஸ், நிலக்கடலை உள்ளிட்டவை விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன.
ஓசூர் பகுதிகளில் விளையும் காய்கறி, பழ வகைகள் உள்ளிட்டவை தமிழகத்தின் மதுரை கோயம்புத்தூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஓசூர் பகுதிகளில் காய்கறி வகைகள் விலை ஏற்றம், குறைவாக இருந்து வந்தாலும் முட்டைக்கோஸின் விலை மூன்று ஆண்டுகளாகவே குறைந்த விலைக்கே விற்று வந்ததால் முட்டை கோஸ் விவசாயிகள் நஷ்டத்தையே சந்தித்து வந்ததாக தெரிவித்தனர்.
அதிக பரப்பளவில் முட்டை கோஸை பயிரிட்டதே விலை குறைவிற்கான காரணமாக சொல்லப்படுகிறது.
இந்தாண்டு மழையின் அளவு குறைந்ததாலும், வெயில் வாட்டி வதைத்ததால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 50% குறைவாகவே முட்டை கோஸை விவசாயம் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தற்போது ஓசூர் உழவர் சந்தைகளிலேயே 100 கிலோ கொண்ட முட்டைகோஸ் ஒரு மூட்டை 1200 முதல் 1500 வரை விற்க்கப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளாக விலை குறைந்து நஷ்டமடைந்து வந்த முட்டைகோஸ் விவசாயிகளுக்கு விலை உயர்வு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.