கோபிச்செட்டிப்பாளையம் : கோபி அருகே உள்ள நம்பியூரில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
எந்த பள்ளியிலும் குடிநீர் பற்றாக்குறை என்ற தகவல் இதுவரை எங்கள் கவனத்திற்கு வரவில்லை.
பள்ளிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறைக்கு தேவையான தண்ணீரை பெற்றோர் ஆசிரியர் சங்க பணத்தில் இருந்து போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றிக்கொள்ள உத்தரவிட்டுள்ளோம்.
அது போன்ற நிலையில் உள்ள பள்ளிகள் குறித்து தகவல் வந்தால் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும்.
தமிழகத்தில் 37000 நடுநிலை பள்ளிகள், 6200 உயர் நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகள் உள்ளது. அனைத்து பள்ளிகளையும் கண்காணித்து வருகிறோம்.
தண்ணீர் பற்றாக்குறை குறித்து திங்கட்கிழமை முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு பணி நடைபெறும்.
காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளிக்கு விடுமுறை விட்டுள்ளதாக கூறப்படுவது இன்று விடுமுறை தினம் என்பதால் தான் விடுமுறை விடப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் இல்லை.
மாணவர்களுக்கு தேசபக்தியோடு, பெற்றோரை நேசிக்கவும், கல்வியோடு ஒழுக்கத்தை கற்று தரவும் வாரத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்டும்.
பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க, மெக்சிகோவில் உள்ள ஒரு குழுவினருடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
அந்த குழுவினர் லயோலா கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பார்கள்.இந்த பணி அடுத்த வாரம் தொடங்கப்படும். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 11 வகையான பயிற்சி அளிக்கப்படும்.அதன் பின்னர் இந்த பயிற்சி பள்ளிகளில் வாரத்தில் ஒருநாள் பள்ளிகளில் வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் 10000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம். அங்கு மட்டுமல்ல தமிழகத்தில் எந்த பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தாலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கலாம்.
டி.ஆர்.பி தேர்வுக்கு தமிழ் பாடத்தை படித்தவர்களும் தமிழ் வழியில் தான் படித்தார்கள் என்ற சான்று குறித்து கேட்ட போது, வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழே தெரியாமல் ஆசிரியர் பணிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவும், பல்வேறு மொழி பேசும் சிறுபான்மை மக்கள் தமிழை படித்து இருக்க வேண்டும் என்பதற்கு தான் தமிழ் வழி கல்வி என்ற சான்று இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.