சிங்கப்பூருக்கு போனதுக்கு பதிலா பெங்களூருக்கு பறந்து போயி… தண்ணி தொறக்க வழி செய்து தமிழகத்தின் தாகத்தை போக்கியிருக்கலாம்ல..!? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழகத்தில் தமிழகத்தில் மக்கள் சிரமப் படும் போது, திமுக தலைவர் ஸ்டாலின் சிங்கப்பூர் சென்று வந்ததைக் கேலி செய்யும் விதமாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப் போனதாலும், ஏரி குளங்கள் வறண்டு நிலத்தடி நீரும் கீழே இறங்கி விட்டதால், பரவலாக தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தீர்க்கவும், சரியான முன்னேற்பாடுகள் மற்றும் மாற்று வழிகளை உடனடியாக மேற்கொள்ளாததாலும், தண்ணீர் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறை என்றால் உடனடி தீர்வாக கருதப் படும், லாரிகள் மூலமாக தண்ணீர் விநியோகம் செய்வதை அரசும் தனியார் அமைப்புகளும் மேற்கொண்டு வந்தாலும், அது போதுமானதாக இல்லை.
இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை அரசு தீர்க்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. முன்னதாக, குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சென்றிருந்த திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று தமிழகம் திரும்பி, சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
திமுக., தலைவரின் இந்த அரசியல் ஸ்டாண்ட் குறித்து தனது டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்,
சிங்காரச் சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சென்னை மேயராக இருந்தபோது சொன்ன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்… தற்போது தான் மட்டும் சிங்கப்பூர் சென்றுவிட்டு வந்து இங்கே தண்ணீர் எங்கே என்று போராடுகிறார்…
சிங்கப்பூர் சென்றதிற்கு பதிலாக பெங்களூர் சென்று அவர்களின் கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரஸ் நீர் பாசன அமைச்சரிடம் காவிரி மேலாண்மை வாரிய ஆணைப்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம் என்று கேட்டுவிட்டு வந்து இங்கே போராடி இருந்தால் அவரை பாராட்டி இருக்கலாம்.
மக்களின் தாகத்தை அரசியலாக்கி தங்களின் பதவி தாகத்துக்கு போராடுவதா? இது போன்ற திமுகவின் நாடகங்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள்… @BJP4India @BJP4TamilNadu
எனத் தெரிவித்துள்ளார்.
மக்களின் தாகத்தை அரசியலாக்கி தங்களின் பதவி தாகத்துக்கு போராடுவதா?
இது போன்ற திமுகவின் நாடகங்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள்… @BJP4India @BJP4TamilNadu (3/3)— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) June 25, 2019
முன்னதாக, அதிமுகவினர் யாகம் நடத்தியதால்தான் மழை வந்தது என்று கூறியிருந்தார் தமிழிசை சௌந்தரராஜன்! தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்னைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்!
தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க வேண்டி கோவில்களில் அதிமுகவினர் யாகம் நடத்தி வருகின்றனர்! இந்த நிலையில் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் 2 நாட்களாக மழை பெய்தது!
இந்த நிலை குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியபோது திமுகவினர் யாகம் நடத்தினால் எதிர்க்கின்றனர்! யோகா நடத்தினாலும் எதிர்க்கின்றனர்! ஆனால் தண்ணீருக்காக போராட்டம் மட்டுமே நடத்துகின்றனர்! போராட்டம் நடத்தினால் மட்டும் தண்ணீர் வந்துவிடுமா? யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது!” என்று கூறினார்.