அத்திவரதரை தரிசிக்க எத்தனை எத்தனை பேர்…? கட்டுக்கடங்காத கூட்டம். காரணம் என்ன?
அறநிலையத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் முதலில் ஆலோசனை நடத்திய போது, ஒரு நாளுக்கு சராசரியாக 20 ஆயிரம் பேர் வருவார்கள் என்றும், அது சனி, ஞாயிறு வார இறுதி நாட்களில் 25 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் பேர் வரை இருக்கக் கூடும் என்றும் கணித்தனர்.
அதன் அடிப்படையில் தொடக்க கட்ட பணிகள் நடந்தன. ஆனால் இன்றோ ஒரு நாளுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வந்து கொண்டிருக்கிறார்கள். வார இறுதி நாட்களில் இது இரு மடங்காகிறது.. இத்தனை பேர் ஒன்று போல் குழுமத் தொடங்கினால், காஞ்சிபுரம் தாங்குமா?!
காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் இருக்கும் பகுதி, விஷ்ணு காஞ்சி என்றும், சின்ன காஞ்சிபுரம் என்றும் பெயர் கொண்டது. பெயரே சின்ன காஞ்சி. ஊரும் சிறிய ஊர்தான். குறுகலான தெருக்கள், இடவசதியின்மை.
கோயிலைச் சுற்றி எங்குமே கழிப்பறை வசதிசெய்யப் படவில்லை. கோயிலுக்கு வெளியே எங்குமே பயோ டாய்லெட் கூட அமைக்கப் படவில்லை. வயதானவர்கள் வந்தால் கடும் சிரமம். சுமார் ஏழு மணி நேரம் அவர்களால் இயற்கை உபாதையைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை.
இயற்கை உபாதை ஏற்பட்டால், கோயிலுக்கு வெளியே எங்கோ வந்து மீண்டும் வரிசையில் இணைந்து செல்ல வழி கிடையாது. முதலில் வரிசையே கிடையாது. ஒட்டுமொத்தமாக மக்களை கூட்டமாக அனுப்புகின்றனர்.
ஆலயத்தின் சார்பில் தண்ணீர் வசதி செய்யப்படவில்லை. சொல்லப் போனால், இந்த வருடம் தொடக்கத்திலேயே அத்திவரதர் உத்ஸவம் குறித்து பேசப் பட்டது. தொடந்து தேர்தல் வேறு நடந்தது. அந்த நேரத்திலும் அத்திவரதர் உத்ஸவம் குறித்து விவாதிக்கப் பட்டது. ஆனால், தண்ணீர் இல்லை என்ற காரணத்தைக் காட்டி, அத்திவரதர் ஸேவை உத்ஸவத்தை அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைக்கலாம் என்று சிலர் பேசினர். சிலரோ, மழைக்காலத்துக்கு கொண்டு செல்ல யோசனை கூறினர்.
ஆனால், எப்படியோ இந்த ஜூலை என்று முடிவாகி, அத்திவரதர் வைபவமும் தொடங்கியாயிற்று. ஆனால், அதற்கான முன்னேற்பாடுகளும் வசதிகளும் நினைத்த அளவில் இல்லை. நிழற்கூரை சரியில்லை. கூட்டத்தை எதிர்கொள்ள முன்னேற்பாடு இல்லை. தாகம் தணிக்க தண்ணீர் வசதிக்கு மெனக்கெடவில்லை.
ஆனால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி… காஞ்சிபுரத்தில் கடைகள் பல விரித்து விட்டார்கள் நிலைமையை எதிர்கொண்டு வியாபாரம் செய்யும் ‘தமிழர்கள்’! அத்திவரதரை வைத்து காஞ்சிபுரத்து ஐயர்களுக்கு காசு தேறுது என்று நக்கல் அடித்துக் கொண்டே, வியாபாரத் தமிழர்கள் செய்யும் அடாவடிகள் கொஞ்ச நஞ்சமல்ல! அவர்கள் வைத்ததுதான் சட்டம்! அண்ணாத்துரை ஊராயிற்றே!
நன்றாக காசு பார்க்கிறார்கள்! தண்ணீர் பாட்டில்கள் விற்பனை அமோகம்! சுகாதாரமற்ற முறையில் நீர் வியாபாரம். ஆட்டோக்கள் வழியில் தங்குமிடம் குறித்த வியாபாரம். தொட்டதற்கெல்லாம் வியாபாரம் செய்து, 40 வருட ஏக்கத்தை ஒரே மாதத்தில் பார்த்துவிட விடாப்பிடியாக இருக்கிறார்கள். இவர்களின் வியாபார வசதிக்காகவே, ஆலய நிர்வாகமும், அறநிலையத்துறை அதிகாரிகளும் அரசும் பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்காமல், மெத்தனமாகவே இருந்துவிட்டதாக பேசுகின்றனர் பொதுமக்கள்!
உள்ளூர் மக்கள்பாடு படு திண்டாட்டம். வீடுகளில் இருந்து வாகனங்களைக்கூட எடுக்க முடிவதில்லை. பலருக்கும் அலுவலகம் செல்வது பெரும் பாடு. வீட்டை விட்டு வெளியில் வந்தாலே நேரம் ஆகிறது சாலையில் நடக்க!
உள்ளூர் மக்கள் சொல்வது போல், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வெளி மாநிலத்தவர்கள் திண்டாடுகின்றனர்.
எங்கோ இரண்டு தகவல் பலகை வைத்திருக்கின்றனர். ஆனால், அதன் அருகில் செல்வதற்கு வழி கிடையாது. தடுக்கப் பட்டிருக்கிறது.
முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமங்களைச் சந்திக்கின்றனர். குழந்தைகளுடன் தயவுசெய்து யாரும் வராதீர்கள் என்று கெஞ்சாத குறையாகவே உள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்காமல் அத்தி வரதரை தரிசிக்க சில டிப்ஸ் :
வார இறுதி நாட்கள் விடுமுறை நாட்களை தவிர்க்கவும்…
வெயிலில் இருந்து தப்பிக்க அதிகாலை மற்றும் மாலை வேளைகளை தேர்ந்தெடுக்கவும்….
அதிகாலை 3 To 4 மணிக்குள் சென்றால் கிழக்கு கோபுர வாசலில் வயதான வர்களுக்கும், குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு தனி வரிசையில் அனுப்பு கின்றனர் ! அரை மணி நேரத்தில் தரிசனம் கிடைக்கும்!
குழந்தைகளை அழைத்து வரும் பக்தர்கள்,குடிநீர் பாட்டில், பிஸ்கெட், பழங்கள் எடுத்துச் செல்வது நல்லது! முடிந்தால் கையுடன் ஒரு விசிறி மட்டையும் எடுத்துச் செல்லவும்,
காலி குடிநீர் பாட்டில்களையும்,தின்பண்டங்களையும் வழியிலும்,கோவில் பிரகாரத்திலும் வீசாமல்,கைப்பைகளில் சேகரித்து வைத்துக் கொண்டு,தரிசனம் முடிந்தபின் வெளியே உள்ள குப்பைத் தொட்டிகளில் போடலாம்,
வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள்,இரண்டு நாட்களுக்கு திட்டமிட்டு தங்கும் அறை புக் செய்து கொள்வது நல்லது,அப்போதுதான் அதிக கூட்டநெரிசல் இருந்தால் திரும்பி விட்டு,பின் கூட்டம் குறைந்தபின் சென்று தரிசிக்கலாம்,பிற கோவில்களுக்கும் சென்று தரிசித்து வரலாம்,
அரசின் ஏற்பாடுகளில் சில குறைகள் உள்ளது உண்மைதான்,ஆனாலும் நாம் அதை மட்டுமே சார்ந்திருக்காமல் சரியாக திட்டமிட்டால் சிரமங்களை தவிர்க்கலாம்,…
சிலர் உள்நோக்கத்துடன் குறைகளை மட்டுமே மிகைப்படுத்தி வரும் பதிவுகளும்,வாட்ஸப் வதந்திகளும் உங்களை பயமுறுத்தக் கூடும்,பயம் அவசியமற்றது,..
நீங்கள் தரிசிக்க செல்வது ராமானுஜரும்,திருக்கச்சி நம்பிகளும்,வேதாந்த தேசிகரும்,பூதத்தாழ்வாரும் சேவித்த,பூசித்த,நேசித்த பேரரருளாளன் அத்தி வரதனை என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்,அவன் கடைக்கண் பார்வை பட்டாலே நமது பிறவிப்பிணியை நீக்கி வரம் தந்து அருளும் கொடையாளன் வரதன் என்பதை மறவாதீர்,
எனவே பொறுமையுடனும்,உள்ளார்ந்த பக்தியுடனும்,எண்ணத்தில் வரதரை மட்டும் நிறுத்தி,’வரதா’ ‘வரதா’ என்று அவன் நாமத்தை உச்சரித்து தரிசனம் செய்து விட்டால்,எவ்வித சிரமங்களை அனுபவித்திருந்தாலும்,அத்தனையும் வெயில் கண்ட பனிபோன்று உருகி காணாமல் போய் விடாதா.?
ஆதி அத்திகிரிநாதரின் பொற்பாதம் பணிவோம்,
சனிக்கிழமை இன்று அத்திவரதரை தரிசிக்க வந்த பொதுமக்களின் பெருங்கூட்டம்…காணொளி..
[videopress NSkzhkcV]