திமுக மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி நிலைமை என்ன ஆகும்? செந்தில்குமார் (செந்தில் பாலாஜி) கருணாநிதியின் தி.மு.க.,வினரை களையெடுக்க தொடங்கி விட்டாரா? இப்படித்தான் கரூர் திமுக.,வினர் தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழக அளவில் கரூர் என்றாலே பஸ் பாடி கட்டும் தொழில், கொசு வலை தயாரிப்பு, டெக்ஸ்டைல் ஏற்றுமதி என்று புகழுக்குப் பஞ்சமில்லாது இருந்த நிலையிலும், அரசியல் வரலாற்றில் மதிமுக., அதே கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சியில்தான் உருவானது.
மேலும், அரசியல் மாற்றங்களாக… சிலர் அ.தி.மு.க விலிருந்து தி.மு.க விற்கும், தி.மு.க விலிருந்து அ.தி.மு.க விற்கும் மாறும் காட்சிகளும் அடிக்கடி நடைபெற்று வருவதும் இந்த கரூர் மாவட்டத்தில்தான்!
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிகார துஷ்பிரயோகத்தை அடுத்தும், அவருக்கு ஈடுகொடுக்க முடியாமலும்தான் அதிமுக.,விலிருந்து, செந்தில் பாலாஜிக்கு பயந்து கொண்டு 10 ஆயிரம் அதிமுக., தொண்டர்களுடன் திமுக.,வில் இணைந்தார்.
அப்படி திமுக.,வுக்கு குடி பெயர்ந்த சின்னசாமி, தற்போது செந்தில் பாலாஜியும் திமுக.,வுக்கே குடி வந்த பிறகு, தனது பலம் குறைந்து கொண்டே வருவதை உணர்ந்துள்ளார். இதனால் தற்போது நொந்து நூடுல்ஸ் ஆன கதையாக, சம்பவங்கள் கரூரில் தினம் தினம் நடக்கின்றது.
200க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் 10 ஆயிரம் நபர்களுடன் அதிமுக.,விலிருந்து கருணாநிதி முன்னிலையில் இணைந்தார் சின்னசாமி! அவருக்குக் கூட மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கவில்லை. ஆனால் சுமார் 5 பேருந்துகளில் 100 பேர் மட்டுமே சென்று தற்போதைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இணைந்த உடனேயே கட்சியின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வேட்பாளர் பதவி என செந்தில் பாலாஜிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. தற்போது எம்.எல்.ஏ வாகவும் இருக்கிறார் செந்தில் பாலாஜி!
இதனால், இத்தனை நாட்களாக கட்சியே மூச்சு, கட்சியே உயிர் என்று இருந்த உண்மையான திமுக., வினரிடையே கரூர் மாவட்ட அளவில் பெரும் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், நாளுக்கு நாள் திமுக.,வின் உண்மை விசுவாசிகளை களையெடுத்து, செந்தில் பாலாஜியுடன் கட்சியில் இணைந்தவர்களுக்கு பதவி கொடுக்க முயலும் செயலில் தலைமை ஈடுபட்டு வருவதாக உள்ளம் நொந்து கூறுகின்றனர் திமுக.,வினர்.
எனவேதான், முன்னாள் அமைச்சர் சின்னசாமியின் தற்போதைய நிலைமை என்ன ஆகும்? கரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் நிலைமை என்ன ஆகும்? உண்மையான திமுக., விசுவாசிகளின் நிலை என்ன ஆகும்? என்று கரூர் மாவட்ட திமுக.,வினர் ஒவ்வொரு நாளும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது, செந்தில் பாலாஜியின் ஒரே நோக்கம் கரூர் மாவட்ட அளவில் அமமுக வின் தினகரன் கட்சியை காலி செய்வது என்பது தான்! இதுவே மு.க. ஸ்டாலினும் அறிந்திருக்கிறார் என்கிறார்கள்.
இதனிடையே, ஆங்காங்கே வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களில் மாவட்ட நிர்வாகிகள் படம் இருப்பதில்லை என்பதால் திமுக.,வினர் ஒருபுறமும், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் படமும் இல்லை என்பதால் கூட்டணிக் கட்சியினரும் பெருமூச்சு விடுகின்றனர்! எங்கே போய் முடியுமோ இந்த நிலை!