சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்.
உடல் நிலை சரியில்லாத ராஜகோபாலை பொது மருத்துவமனையில் இருந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப் பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் சரவண பவன் ஓட்டல்களின் உரிமையாளர் ராஜகோபால் இன்று காலமானார்.
தன் அலுவலகத்தில் பணியில் இருந்த பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரண் அடைந்த ராஜகோபால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். மருத்துவமனையில் சிறைக் கைதிகளுக்கான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை பெற்றுவந்த ராஜகோபால் தீவிர சிகிச்சையில் இருந்தார்.
71 வயதான ராஜகோபாலுக்கு, வயது மூப்பின் காரணத்தால் உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில், செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப் பட்டது. இந்நிலையில் போதிய வசதி இன்மை காரணத்தால், அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க குடும்பத்தார் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், நீதிமன்றத்தில் ராஜகோபாலின் மகன் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க அனுமதி அளித்தது.
இதை அடுத்து ராஜகோபால் இரு தினங்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.