ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும் என்றும், தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆசிரியர் சௌபாக்கியவதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2012ஆம் ஆண்டு மதுரை அருகே உள்ள பள்ளிக்கு பணி மாறுதல் பெற்றுச் சென்றேன். அப்போது, பணி ஆணையைப் பெற அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர். நான் அவ்வாறு லஞ்சம் கொடுக்க மறுத்தேன். எனவே, என்னை பழிவாங்கும் நோக்கத்தில், நான் முறையாகப் பணியாற்றவில்லை எனக் கூறி துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே என் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால், ஆசிரியர் சௌபாக்கியவதி பாடம் எடுத்த வகுப்புகளில் மாணவர்கள் எளிமையான கேள்விகளுக்கே பதில் சொல்லத் திணறியதாகவும் எனவேதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பள்ளிக் கல்வித் துறை செயலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் சிறப்புக் குழுக்களை அமைத்து, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது.