சரவணன் பிக்பாஸில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் பயணிப்பேன் என்று சொன்னதை அடுத்து வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கண்டனங்கள் என அல்லோல கல்லோலப்பட்டது.
பின்னணிப் பாடகி சின்மயி தன் கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.இதனை கமலும் ஆதரிப்பது போன்று நடக்கலாமா என பலவாறு எழுந்த கருத்துக்களின் விளைவாக, சரவணன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
கமலின் அரசியல் வாழ்வுக்கு பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் சரவணனை அவசர அவசரமாக மன்னிப்பு கேட்க வைத்துள்ளார் பிக் பாஸ் எனக் கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது. சர்ச்சைகள் மூலம் தான் பிக் பாஸ் டிஆர்பியையே உயர்த்துகிறார். முதல் சீசனில் காயத்திரி ரகுராம், ட்ரிக்கர் சக்தி, ஜூலி, ஹாரத்தி, சினேகன் என அனைவருமே பல சர்ச்சைகளை கிளப்பியது ரசிகர்களுக்கு நினைவிருக்கும்.இரண்டாவது சீசனில் சர்வாதிகாரி டாஸ்கில் ஐஸ்வர்யா தத்தா பாலாஜி மீது குப்பையை கொட்டியது சர்ச்சையானது. அதேபோல் அரசியல் தலைவர் ஒருவர் பெயரை ரித்விகா குறிப்பிட்டதும், பொன்னம்பலம் செய்த சில விஷயங்களும் சர்ச்சையானது.
அதேபோல், முதல் சீசனில் ஆரவ்- ஓவியா காதல், மருத்துவமுத்தம், இரண்டாவது சீசனில் மஹத்- யாஷிகா காதல் போன்றவைகளும் சர்ச்சைகளில் சிக்கியது. இரவில் இளசுகள் செய்யும் லீலைகள் குறித்து பொன்னம்பலமும் கமலிடமே புகார் தெரிவித்தார். இப்படியாக பல்வேறு சர்ச்சைகளில் பிக் பாஸ் சிக்குவது வழக்கமான விசயம் தான்.மூன்றாவது சீசனில் அது போன்ற சர்ச்சைகள் ஆரம்பத்தில் இருந்தே துளிர்விடத் தொடங்கியது. வனிதா தீயை பற்ற வைக்க, மீரா, மதுமிதா எல்லாம் அதில் எண்ணெய் ஊற்ற என பற்றிக்கொண்டு தெரிய தொடங்கியது. இன்னும் அந்த தீ அடங்கியபாடில்லை. வனிதாவை, மீராவை பிக் பாஸ் வீட்டில் விசாரிக்க போலீஸ் சென்றது தான் இந்த சீசன் ஹைலைட்டாக இருந்து வந்தது.பின்னர் மீரா சேரன் மீது கூறிய பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. மீராவும் ஒரு வழியாக வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இப்போது டிவி சேனல்களே விவாதம் நடத்தும் அளவுக்கு சத்தமில்லாமல் புதிய சர்ச்சையை கிளப்பி எரியும் தீயில் மேலும் எண்ணெய்யை ஊற்றி இருக்கிறார் சரவணன்.
கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ச்சியின் போது, தன்னுடைய கல்லூரி நாட்களில் பேருந்துகளில் பெண்களை இடித்திருக்கிறேன் என்று கமல்ஹாசன் முன்னிலையில் சரவணன் கூறினார் . அப்போது இந்த விவகாரம் இந்தளவுக்கு பெரிதாகும் என கமலே எதிர்பார்த்திருக்க மாட்டார். எனவே தான் அவரும் நகைச்சுவையாக சிரித்து அதனைக் கடந்து போனார். அங்கு கூடியிருந்த மக்களும் கைதட்டி ரசித்தனர்.ஆனால், சரவணனின் இந்தப் பேச்சுக்கு பெண்கள் அமைப்பினர் எல்லாம் டிவிட்டரில் போர்க்கொடி தூக்கி விட்டனர். சரவணன் அப்படி சொல்லும் போது சமூக பொறுப்புள்ள ஒரு கட்சித் தலைவரான கமலும் எப்படி சிரிக்கலாம் என கேள்விக்கனைகளை அவர்கள் தொடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே திக்குமுக்காடி போய்விட்டார்கள்.
இதையடுத்து நேற்றைய எபிசோடில், சரவணனை கன்ஃபஷன் அறைக்கு அழைத்த பிக் பாஸ், “நீங்கள் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். அதைத்தொடர்ந்து, கமல் பாணியிலேயே (இல்லைனு சொல்லலை.. இருந்தா நல்லாயிருக்கும்னு தான் சொன்னேன்’ என்ற ரேஞ்சுக்கு) பொதுமக்களிடம் சரவணன் மன்னிப்பு கேட்டார்.
“நான் பேசியது மிகப் பெரிய தவறு. அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் இளம் வயதில் செய்தது போல் யாரும் செய்யக்கூடாது என்பதை சுட்டிக்காட்டவே நினைத்தேன். ஆனால், அதற்குள் பேச்சு வேறு திசைக்கு சென்று விட்டதால், நான் சொல்ல நினைத்ததை முழுமையாக முடிக்க இயலவில்லை. தயவு செய்து மக்கள் என்னை மன்னித்துவிடுங்கள்” என அவர் கேட்டுக்கொண்டார்.ஆனால் இந்த பிரச்சினையை யாரும் விடுவதாக இல்லை. சரவணனை வைத்து கமலை கார்னர் செய்ய பலர் முயற்சிக்கிறார்கள். டிவிட்டரில் இன்னமும் தீயாய் பரவி வருகிறது இந்த பிரச்சினை. கமல்ஹாசன் மேடையில் தோன்றி விளக்கமளிக்க இன்னும் நான்கு நாட்கள் உள்ளதால், பிரச்சினை சமாளிக்க பிக் பாஸ் டீம் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது.
அதனால் தான் அவசர அவசரமாக சரவணனை அழைத்து மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறது. ஏனெனில் இது கமலின் அரசியல் வாழ்வுக்கு களங்கம் விளைவிப்பதாக ஆகி விடக்கூடாது என்ற பயம் தான். எதிர்க்கட்சிகளின் வாய்க்கு இந்த விவகாரம் அவல் ஆகி விட்டதால் தான் இந்த அவசர நடவடிக்கை எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்திலும் வழக்கம் போல கமல் தனது டிவிட்டரில் கருத்து தெரிவிப்பார் என எதிர் பார்க்கப்படுக்கிறது.