― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஆன்மிக வேடதாரிகள்!

ஆன்மிக வேடதாரிகள்!

- Advertisement -

*இன்று எந்தத் தொலைக்காட்சி அலைவரிசையும் ஆன்மிகத்தைப் புறக்கணிக்க இயலவில்லை. காலை நேரங்களில் ஏறக்குறைய எல்லா அலைவரிசைகளிலும் ஆன்மிக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

தல புராணங்கள், பக்திப் பாடல்கள், சுவாமிக்கு நிகழ்த்தப்படும் அபிஷேக ஆராதனைகள், குடமுழுக்கு நேரடி வர்ணனைகள் இவற்றோடு ஏராளமான ஆன்மிகச் சொற்பொழிவாளர்களும் பல நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்கிறார்கள்.

ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்கு முன்பை விட இப்போது அதிகமாகக் கூட்டம் வருகிறது.

ஆனால் இந்தச் சொற்பொழிவுகள் மக்களிடையே உண்மையான பக்தி உணர்வையும் தத்துவச் சிந்தனைகளையும் தோற்றுவிக்கின்றனவா என்பது கேள்விக்குறி. ஒருசிலர் தங்கள் ஆரவாரமற்ற கருத்தாழம் நிறைந்த உரைகளால் சிறந்த ஆன்மிகத் தொண்டாற்றி வருகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

என்றாலும் பொதுவாக இந்த ஆன்மிகச் சொற்பொழிவுத் துறையில் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படைக் கோட்பாடுகளை எல்லாச் சொற்பொழிவாளர்களும் கடைப்பிடிக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதில்.

முக்கியமாகக் கருத்தை எடுத்துச் சொல்லும் முறை. பக்தி உணர்வுடையவர்களின் நெஞ்சங்களில் பக்தி அலையை எழுப்ப வேண்டும் என்பதே இத்தகைய சொற்பொழிவுகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.

ஒரு சொற்பொழிவாளர் பாற்கடலில் பரந்தாமனுக்கு ஸ்ரீதேவியும் பூதேவியும் பாதசேவை செய்து கால்பிடித்து விடும் காட்சியை வர்ணிக்கும்போது, அவர்கள் திருமாலுக்கு மசாஜ் செய்தார்கள் என்று பேசினார். தன் பாதங்களில் சரணடைபவர்களைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து கரைசேர்க்கும் பரமனைப் பற்றிப் பேசும்போது இப்படியா கொச்சை மொழியைப் பயன்படுத்துவது?

இன்னொரு சொற்பொழிவாளர் `அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்` என்ற கம்பராமாயணக் காட்சியை விவரிக்கும்போது, ராமனும் சீதையும் ஒருவரையொருவர் சைட் அடித்துக் கொண்டார்கள் என்று பேசினார். பாற்கடலை விட்டுப் பிரிந்து மண்ணுலகம் வந்த தெய்வீகக் காதலர்களின் புனித உணர்வை இப்படியா விவரிப்பது?

வேறொரு சொற்பொழிவாளர் தான் நாத்திகனா ஆத்திகனா என்று தனக்கே தெரியவில்லை எனத் தன் ஆன்மிகச் சொற்பொழிவின் இடையே குறிப்பிட்டார். இந்த சந்தேகம் அவருக்கே இருக்கும்போது அவர் ஆன்மிக மேடைகளுக்கு வருவானேன்? முதலில் தன்னைத் தெளிவுபடுத்திக் கொண்டு தன் இயல்புக்கேற்ற மேடைகளில் அவர் பேசலாமே?

ஆன்மிகத்தின் மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று தனிமனித ஒழுக்கத்தை வளர்ப்பதுதான். தனிமனித ஒழுக்கமில்லாதவர்கள் ஆன்மிக மேடைகளைத் தாங்களாகவே தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டாலும், கூட்ட அமைப்பாளர்கள் அத்தகையவர்களை ஆன்மிக மேடைகளில் ஏற்றாமலிருப்பது நல்லது. ஆன்மிகச் சொற்பொழிவாளர்களைத் தெய்வம் போல எண்ணும் மக்கள் கூட்டம் ஒன்று தமிழகத்தில் இருக்கிறது. அவர்களை ஏமாற்றுவது சரியல்ல.

`இப்படியெல்லாம் பேசக் கூடாது` என்று சொன்னால் எப்படியெல்லாம் பேச வேண்டும் என்ற கேள்வியும் எழும். அதற்கான பதில், கிருபானந்த வாரியாரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான்.

வாரியார் பாமரர்க்கும் புரியக் கூடிய மொழியில்தான் பேசினார். பாமரர்களை ஏராளமான எண்ணிக்கையில் அவரது சொற்பொழிவு கவர்ந்தது. ஆனால் பக்தி உணர்வே அவரது பேச்சின் அடிநாதமாக இருந்தது. காரணம் அவரே பெரிய பக்தராக வாழ்ந்தார்.

தாங்கள் பின்பற்றாத கோட்பாடுகளை மற்றவர்களைப் பின்பற்றச் சொல்லி ஆன்மிகச் சொற்பொழிவு செய்பவர்கள் முன்பும் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிச் சொல்லும்போது ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னார்: `பஞ்சாங்கத்தில் மழை எப்போது வரும் என்று போட்டிருக்கும். ஆனால் பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராது!` என்று.

பரமஹம்சரே ஒரு மிகச் சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளர்தான். அவரது உரைகளால் கவரப்பட்டுத்தான் விவேகானந்தர், பரமஹம்சரின் அமுத மொழிகளைத் தொகுத்த மகேந்திரர் போன்ற உன்னத ஆன்மிகவாதிகள் உருவானார்கள்.

தமிழின் ஆன்மிகச் சொற்பொழிவுத் துறையை வளர்த்த முன்னோடிகளில் ஒருவர் வள்ளலார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். வள்ளலார் மரபில் ஆன்மிகச் சொற்பொழிவுத் துறை வளர வேண்டும்.

அரசியல், சினிமா, இலக்கியம் போன்ற துறைகளைப் போன்றதல்ல ஆன்மிகத் துறை. மற்ற துறைகளில் வேடதாரிகள் அனுமதிக்கப்படலாம். (சினிமாத் துறை வேடதாரிகளுக்கென்றே உருவானது!)

ஆனால் ஆன்மிகத் துறையில் பசுத்தோல் போர்த்திய புலிகளை அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால் கடும் துயரங்களுக்கு ஆட்பட்டு ஆன்மிகத்தில் சரணடைய விரும்பும் அன்பர்கள் தவறாக வழிநடத்தப்படும் அபாயம் இருக்கிறது. இதை உணரவேண்டிய காலகட்டம் இது

  • திருப்பூர் கிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version