பூர்ணா தேவி, வயது 19, திருப்பூரில் உள்ள ஒரு உடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில், அங்கேயே பணியாற்றி கொண்டிருந்த ரிமு ஷேக் என்ற ஒருவனோடு 2016ம் ஆண்டு தலைமறைவாகி போனார்.
ஏழு வருடங்களாக அந்த நபர் திருப்பூரில் வசித்து வந்ததாகவும், பணியிடத்தில் மேற்கு வங்காள முகவரி கொண்ட வாக்காளர் அடையாள அட்டையை சமர்பித்திருந்ததாகவும், மேற்கு வங்காளத்தில் அவர்கள் இருவரும் வாழ்வதாக அந்த பெண்ணின் பெற்றோர்கள் நினைத்து கொண்டிருந்த நிலையில், அவசரமாக பணம் தேவைப்படுவதாக அந்த பெண் தொலைபேசியில் கேட்டு கொண்டதின் படி ரூபாய்.10000/-, ஷஹீதுல் தலால், என்ற பெயர் கொண்ட வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார்கள்.
அதன் பின் பல நாட்கள் எந்த தகவலும் இல்லாத நிலையில், பெண்ணின் பெற்றோர்கள் திருப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, திருப்பூர் போலீசார் பெண்ணை தேடி மேற்கு வங்காளத்திற்கு சென்றுள்ளார்கள்.
வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த முகவரி போலி என்பதை தெரிந்து கொண்டு அதிர்ச்சியுற்ற காவல் துறையினர், வங்கி கணக்கின் துணையோடு ஷஹீதுல் தலாலை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த பணத்தை சட்ட விரோதமாக வங்காளதேசத்தில் இருந்த ரிமு ஷேக்குக்கு அனுப்பியதாக கூறினான்.
மேலும் அவனை ரிமு ஷேக்கிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேச வைத்த போது, வங்காளதேசம் டாக்கா அருகே வசித்து வருவதாகவும், ஒன்றரை வருடத்தில் இரு முறை அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததாகவும், அதில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டு பூர்ணா தேவி இறந்து விட்டதாகவும் கூறியுள்ளான். இஸ்லாமிய முறைப்படி அந்த பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளான்.
மேலும் குற்றவாளியை கைது செய்யவேண்டுமென்றால், அந்நிய நாடான வங்காளதேச காவல்துறையின் அனுமதி பெற வேண்டும் என்றும் நடைமுறை சிக்கலைகள் பல உள்ளன என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்து மேற்குவங்காள அடையாள அட்டையை கொடுத்து, நம் தமிழ் பெண்ணை ஏமாற்றி வங்களாதேசத்திற்கு சென்று சீரழித்து இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்து விட்டதாக அலட்சியமாக கூறியுள்ள இந்த நிகழ்வு நடந்து இரண்டு வருடங்களாகி விட்டன. யார் வேண்டுமானாலும் சர்வசாதாரணமாக இந்தியாவிற்குள் நுழைந்து எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நிலையிலேயே இந்த சோகங்கள் நடைபெறுகின்றன.
வாக்காளர் அடையாள அட்டையை சுலபமாக பெற முடிந்திருப்பது, முறைகேடுகளின், லஞ்சலாவண்யங்களின் கோர முகத்தை அடையாளம் காட்டுகிறது. இதற்கான காரணம் நம் தேசத்தில் முறையான குடியுரிமை அடையாளம் இல்லை என்பதே. ஒருவரே பல ரேஷன் அட்டைகளை வைத்திருப்பது, பல வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருப்பது, பல பெயர்களில் வங்கி கணக்குகளை வைத்து சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்வது என்ற நிலையை மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை, செயல்பாடுகளை, சீர்திருத்தங்களை இந்திய அரசு பல்வேறு காலகட்டங்களில் எடுத்து வருகிறது.
பல சட்டங்களை இயற்றி வருகிறது. ஆனால் அவற்றை முறையாக அமுல்படுத்துவதின் மூலம் மேலும் இந்தியா வலுவடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் பல்வேறு அந்நிய தீய சக்திகளின் தூண்டுதலின் பேரில் உள்நாட்டில் உள்ள மத அடிப்படைவாத மற்றும் பிரிவினைவாத இயக்கங்கள், நிர்வாக சிக்கல்களை, அரசியல் சிக்கல்களை, மத மோதல்களை உருவாக்க துடிக்கின்றன. அரசியல் ஆதாயத்திற்காக, தெரிந்தும், தெரியாமலும் துணை நிற்கின்றன எதிர்க்கட்சிகள்.
தற்போதைய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை முறையாக செயல்படுத்துவதன் மூலம் மட்டுமே பிரிவினைவாதிகளை, அந்நிய தீய சக்திகளை நாம் அடையாளம் காண முடியும்.
நம் பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை, ஒழுக்கத்தை, பொருளாதாரத்தை, தேச பாதுகாப்பை சீர்குலைக்க முயலும் படு பாதகர்களை நாம் தடுக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. தேசிய மக்கள் தொகை பதிவேடு முறையாக பதிவு செய்யப்பட்டால், பல பூர்ணா தேவிக்களை நம்மால் காப்பாற்ற முடியும். ரிமு ஷேக் போன்ற சமூக, தேச விரோதிகளை அடையாளம் கண்டு அகற்ற முடியும்.
ஆனால், அரசியல் சுயலாப நோக்கோடு சில அரசியல் கட்சிகள் தரம் தாழ்ந்து பல விதமான வதந்திகளை பரப்பி பதட்டத்தை ஏற்படுத்த முயல்வது அவர்களுக்கும் நல்லதல்ல. தேசத்திற்கும் நல்லதல்ல. அந்நிய சக்திகளின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்து அவர்களின் அடிவருடிகளாக செயல்படும் அடிப்படைவாத இயக்கங்களும், அரசியல் ஆட்சி அதிகாரத்திற்கு எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கும் அரசியல் கட்சிகளும், மக்களை முட்டாள்கள் என்றெண்ணி, எந்த இஸ்லாமியர்களுக்கும் பாதிப்பில்லாத குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்ப்பது தங்கள் தலையிலேயே கொள்ளிக்கட்டையை எடுத்து சொரிந்து கொள்வதற்கு ஈடானது. இஸ்லாமியர்களுக்கு பரிந்து பேசுவது போன்ற மாயையை உருவாக்கி தேசத்திற்கு துரோகம் செய்ய எத்தனிக்கும் மூடர்களை, பதவி வெறி பிடித்த நயவஞ்சகர்களை பாஜக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும்.
- நாராயணன் திருப்பதி,
செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.