spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைமலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது... இந்த மனிதர்களும்!

மலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது… இந்த மனிதர்களும்!

- Advertisement -
jayamohan

நேற்று காலை பத்து மணி அளவில் சுகாதாரப் பணியாளர் இருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். எங்கள் வீடு வெளியே பூட்டியிருந்தமையால் சென்றுவிட்டு மீண்டும் வந்தார்கள். இரண்டு பெண்கள். முகக்கவசமும் கைக்கவசமும் அணிந்தவர்கள். ஒரு கணிப்பொறிப் பட்டியலை வைத்துக் கொண்டு பெயர், வயது, உடல்நிலை ஆகியவற்றை சரிபார்த்தனர். கோவிட் வைரஸ் எப்படி வரும் என்பதை ஓரிரு வரிகளில் சொல்லி, வெளியே போகவேண்டாம், கேட் உட்பட எதைத்தொட்டாலும் கை கழுவவேண்டும் என்பது போன்ற செய்திகளையும் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

நண்பர் லக்ஷ்மி மணிவண்ணனிடம் அவரிடம் மாத்திரைகள் எல்லாம் இருக்கின்றனவா என்று கேட்டேன். அவை மருத்துவத் துறையால் இரண்டு மாதத்திற்கு தேவையான அளவு முன்னரே அளிக்கப்பட்டுள்ளன, எந்த பிரச்சினையும் இல்லை என்று சொன்னார்.

இன்று காலை மொட்டைமாடியில் நின்றிருக்கையில் அவர்கள் எங்கள் குடியிருப்புக்குப் பின்பக்கம் செல்வது தெரிந்தது. நாட்டிலுள்ள அத்தனை வீடுகளுக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் நேரில் சென்று ஆராய்வது அவர்களின் பணி. காய்ச்சல், இருமல் பிரச்சினைகள் இருக்கின்றன என்று தெரிந்தால் அத்தகவலை அறிவிப்பார்கள். அடுத்தகட்ட மருத்துவக்குழு வருகிறது. கோவிட்டுக்கான வாய்ப்பு உண்டு என்று தெரிந்தால் சுவரில் அறிவிப்பை ஒட்டுகிறார்கள். அந்த இடத்தையே தனிமைப்படுத்துகிறார்கள்.

இந்தியா இன்று கோவிட் வைரஸை எதிர்கொள்வதில் எடுத்துக்கொள்ளும் பெருமுயற்சி மிகமிக அறிவியல்சாரந்தது. ஏற்கனவே சிக்கன்குனியா, சார்ஸ்: அதற்குமுன் காசநோய், மலேரியா,இளம்பிள்ளைவாதம்: அதற்கு முன் அம்மைநோய் காலரா ஆகியவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவப் பின்புலம் கொண்டது. பகுதிகளாக பிரித்து நேரடி மானுடக் கண்காணிப்பில் வைத்தல், தனிமைப்படுத்துதல், இலவச சிகிழ்ச்சை என மூன்று பகுதிகள். அவை வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப் பட்டிருக்கின்றன

மிக எளிமையான அடித்தட்டு ஊழியர்கள் இவர்கள். ஊழியர் ஒருவருக்கு ஒருநாளுக்கு நாற்பது வீடுகள் கணக்கு. இருவர் இருவராகச் செல்கிறர்கள். இந்தியா என்ற இந்த மாபெரும் நிலப்பரப்பை, நூறுகோடி மக்களை அவ்வண்ணம் நேரில் சென்றடைவதற்கு மிகப்பெரிய உழைப்பும் அறிவியல்பூர்வமான திட்டமிடலும் தேவை. இந்த தகவல்களை பதிவுசெய்து ஒருங்கிணைத்து அறிக்கைகளாக ஆக்குவதற்கும் நவீன புள்ளியியல் சார்ந்த திட்டமிடலும் முன் அனுபவமும் தேவை. இந்தியா அதற்கென்றே உருவாக்கிக் கொண்ட பல அறிவியல் ரீதியான கொள்கைகள், சுருக்கும் முறைமைகள் உள்ளன.

இந்த ஊழியர்கள் முன்னரும் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். சிக்கன்குனியா வந்தபோது ஒவ்வொரு வீட்டு கொல்லைப்பக்கமும் சென்று நீர் தேங்குகிறதா என்று பார்தனர். மலேரியா பரிசோதனைக்காக வந்தனர். ஆண்டுக்கு இரண்டுமுறையாவது வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் மாபெரும் மக்கள்தொகை மிகப்பெரிய சவால். அதை சிறுகச்சிறுகக் கையாண்டு பழகியிருக்கிறார்கள். இந்த அமைப்பு இப்போது உருவாக்கப் பட்டது அல்ல, என்றும் இருந்துகொண்டிருப்பது

நானும் சில ஆண்டுகளுக்கு முன் இதைப்போன்ற வேலைகளைச் செய்தவன் என்றமுறையில் இதிலுள்ள சவால்களை அறிவேன். இதில் எட்டு அரசுத்துறைகள் ஈடுபட்டுள்ளன. அவற்றை ஒருங்கிணைக்கும் அரசதிகாரிகளின் அடுக்கு வரிசை உள்ளது. இந்த அமைப்பு பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது என்ற தொன்மம் உண்டு, அது பொய். அது ஷெர்ஷா காலம் முதல் இருப்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் அத்தனை அதிகாரிகளுக்கும் நிகழ்வுகளுக்கும் ஷெர்ஷா காலத்து பெயர்கள்தான் – சிரஸ்தார், தாசில்தார், ஜமாபந்தி. பிரிட்ரிஷார் அதை மேலும் ஒருங்கமைத்தனர்.

ஷெர்ஷாவுக்கு முந்தைய வரலாற்றுக் கால கட்டத்தில் வேறு வகையில் இருந்திருக்கலாம் என்பதற்கான சான்றுகள் உள்ளன.

மாறுபட்ட நில அமைப்பும்,மையப்படுத்தபடாத சமூக அமைப்பும் கொண்ட இந்தியா என்னும் தேசத்தில் இந்தியா செய்யும் இந்தப்பணி, இதன் நடைமுறை அறிவியல், உலகநாடுகளேகூட கற்றுக்கொள்ளவேண்டியது. இன்றைய செய்திகளை வைத்துப் பார்த்தால் சர்வாதிகாரம் திகழும் சில நாடுகளைத் தவிர வேறெங்கும் இத்தகைய முழுமையான ஒருங்கிணைப்பு நிகழவில்லை என்றே தெரிகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் கிராமசேவக் என்ற பெயரில் தொடங்கி இன்று பல வகையான ஊழியர்களைக் கொண்டதாக விரிந்திருக்கும் மாபெரும் கிராமநிர்வாக அமைப்பு ஒன்று இங்கே உள்ளது. அந்த ஊழியர்களைப் பயிற்றுவிப்பதில் திண்டுக்கல் காந்திகிராமம் போன்ற நிறுவனங்களின் பங்களிப்பு மிகப்பெரியது

இதில் முக்கியமான பங்கு வகிப்பவர்கள் இந்தக் கடைநிலை ஊழியர்கள். இந்த ஊழியர்கள் அரசை ஏமாற்றலாம், வேலைசெய்யாமலிருக்கலாம். அத்தனை எண்ணிக்கையில் இருக்கும் அவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆனால் அப்படிச் செய்வதில்லை. இந்தியாவின் கடைநிலை ஊழியர்களுக்கு அவர்களின் வேலைபற்றிய பெருமிதம் இருக்கிறது. அது மாபெரும் ஊக்கசக்தி.

அந்த பெருமிதம் தாங்கள் அரசு ஊழியர் என்பதிலிருந்து வருகிறது. இந்தியாவின் வல்லமை அரசூழியர்களே. சுனாமி உட்பட நெருக்கடிகளில் அதை கண்கூடாகக் கண்டு பதிவு செய்திருக்கிறேன். இந்த மாபெரும் அரசூழியர் அமைப்பு பொருளியல்சுமை என்றும் அதை இல்லாமலாக்கவேண்டும் என்றும் ‘நிபுணர்கள்’ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எப்போதும் அதற்கு எதிரானவனாக இருந்திருக்கிறேன். நூறு கட்டுரைகளாவது எழுதியிருப்பேன். அப்படி அரசூழியர் அமைப்பை அழித்த நாடுகள் எல்லாம் கதறிக்கொண்டிருக்கின்றன.

மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். மெலிந்த கரிய பெண்கள். வீடுகள் முன் சென்று நின்று கேட்டை தொடாமலேயே கூவி அழைக்கிறார்கள். பலமுறை. உள்ளிருந்து ஒருவர் வருகிறார். அவர் எவ்வகையிலும் இனிய முகம் காட்டுவதில்லை. செய்திகளை கேட்டு பதிவுசெய்துவிட்டு திரும்பிச் செல்கிறார்கள். தோளில் பை போட்டிருக்கிறார்கள். அதில் குடிநீர். ஒருநாளில் இருபதுகிலோமீட்டர் நடக்கவேண்டும். இந்தியா என்பது இவர்களே.

மொத்த நகரமும் உறைந்திருக்கிறது. தெருநாய்கள் அன்றி எங்கும் உயிரசைவே இல்லை. மரங்கள் காற்றில் ஆடிக் கொண்டிருக்கின்றன. அந்த இரு பெண்களும் தெருக்களில் தங்களுக்குள் பேசிக்கொண்டே செல்கிறார்கள். எஞ்சியிருக்கும் உயிரசைவு என.

இன்று காலை ஏனோ இவர்களைக் கண்டது நிறைவளிக்கிறது. ஒவ்வொரு நாளும் முற்றத்திற்குச் சென்று செம்பருத்தியும் பொற்கொன்றையும் பூத்திருப்பதைப் பார்க்கிறேன். மலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது. இந்த மனிதர்களும்.

  • எழுத்தாளர் ஜெயமோகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe